சென்னை:
தமிழ்நாட்டில் காவல் நிலையத்தில் உயிரிழப்போருக்கான இழப்பீட்டு தொகை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.7.5 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது.
துப்பாக்கிச்சூட்டில் பலியானோருக்கான இழப்பீட்டு தொகையும் ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.7.5 லட்சமாக உயர்த்தியுள்ளனர். காவலர்களால் பலாத்காரம் செய்யப்பட்டவர்களுக்கான இழப்பீட்டு தொகை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.7.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
காவலர்களால் நிரந்தர உடல் முடக்கம் ஏற்படுவர்களுக்கான இழப்பீட்டு தொகையும் ரூ.7.5 லட்சம் ஆனது. தேசிய மனித உரிமைகள் ஆணைய பரிந்துரையை ஏற்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. காவலர்களால் உடல் துன்புறத்தலுக்கு ஆளானது உறுதியானால் ரூ. 1 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சம் ஆக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளனர்.
காவல் நிலையத்தில் ஒரு குற்றவாளியிடம் நடத்தப்படும் விசாரணையின் விளைவாக நிகழும் மரணம் மட்டுமின்றி, ஒரு குற்றவாளியை காவல் நிலையம் அழைத்து வராமல், வேறு ஒரு இடத்தில் வைத்து விசாரணை நடத்தியதன் விளைவாக நிகழும் மரணமும் காவல் மரணம்தான் என்பது குறிப்பிடத்தக்கது. விசாரணையின்போது சந்தேகக் குற்றவாளியை அடித்து, துன்புறுத்துவதன் மூலம் குற்றம் தொடர்பான உண்மைகளை வெளிக்கொண்டுவர முடியும் என்ற நம்பிக்கை புலனாய்வில் ஈடுபடும் காவல்துறையினரிடம் நிலவுகிறது. இந்த நம்பிக்கையின் காரணமாக சந்தேக குற்றவாளியை விசாரணையின்போது கண்மூடித்தனமாக அடிப்பதால், காவல் மரணம் நிகழ்கின்றது.
காவல் நிலையம் அழைத்து வரப்படும் சந்தேக குற்றவாளி, விசாரணையின் முடிவை எதிர்கொள்ளும் தைரியம் இல்லாமல், காவல் நிலைய வளாகத்திலேயே தூக்குப்போட்டுக் கொண்டோ, நச்சு திரவத்தைக் குடித்தோ தற்கொலை செய்து கொள்வதும் காவல் மரணம் ஆகும். குற்ற விசாரணை நடைமுறை சட்டமோ, புலன் விசாரணை செய்வது குறித்த வழிமுறைகளோ தெரியாத சிலர் புலன் விசாரணைக் குழுவில் இடம் பெற்று விடுகின்றனர். புலன் விசாரணையின்போது அவர்களுடைய வரம்பு மீறிய செயல் சில நேரங்களில் காவல் மரணத்தை ஏற்படுத்திவிடுகிறது.