கொழும்பு: பாகிஸ்தான் அணிக்கு எதிரான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 166 ரன்களுக்கு சுருண்டது.
கொழும்பு நகரில் நேற்று தொடங்கிய இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கை அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக இருந்தது. நிஷான் மதுஷ்கா 4 ரன்கள் எடுத்த நிலையில் ஷான் மசூத்தின் அற்புதமான த்ரோவால் ரன் அவுட் ஆனார். இதன் பின்னர் குஷால் மெண்டிஸ் 6 ரன்னில் ஷாகீன் ஷா அப்ரீடி பந்தில் ஆட்டமிழந்தார். தொடர்நது ஏஞ்சலோ மேத்யூஸ் (9), கேப்டன் திமுத் கருணரத்னே (19) ஆகியோர் நசீம் ஷா பந்து வீச்சில் நடையை கட்டினர். 36 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து தடுமாறிய நிலையில் தினேஷ் சந்திமால், தனஞ்ஜெயா டி சில்வா ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்க போராடியது.
5-வது விக்கெட்டுக்கு 85 ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில் இந்த ஜோடியை நசீம் ஷா பிரித்தார். தினேஷ் சந்திமால் 60 பந்துகளில், 4 பவுண்டரிகளுடன் 34 ரன்கள் எடுத்த நிலையில் நசீம் ஷா பந்தில் ஆட்டமிழந்தார். இதன் பின்னர் களமிறங்கிய சதீரா சமரவிக்ரமா ரன் ஏதும் எடுக்காத நிலையில் அப்ரார் அகமது பந்தில் வெளியேறினார். தனது 13-வது அரை சதத்தை கடந்த தனஞ்ஜெயா டி சில்வா 68 பந்துகளில், ஒரு சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 57 ரன்கள் எடுத்த நிலையில் அப்ரார் அகமது பந்தில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
தொடர்ந்து பிரபாத் ஜெயசூர்யா 1, அஷிதா பெர்னாண்டோ 8, ரமேஷ் மெண்டிஸ் 27 ரன்களில் வெளியேற 48.4 ஓவர்களில் 166 ரன்களுக்கு ஆட்டமிழந்தது இலங்கை அணி. பாகிஸ்தான் அணி சார்பில் அப்ரார் அகமது 4, நசீம் ஷா 3 விக்கெட்களை வீழ்த்தினர். இதையடுத்து விளையாடிய பாகிஸ்தான் அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 28.3 ஓவர்களில் 2விக்கெட்கள் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்தது.
இமாம் உல் ஹக் 6 , ஷான் மசூத் 51 ரன்னில் ஆட்டமிழந்தனர். அப்துல்லா ஷபிக் 74, பாபர் அஸம் 8 ரன்களுடன் களத்தில் இருந்தனர். இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.






