சென்னை:
சென்னை – தாம்பரத்தை அடுத்த ஊரப்பாக்கத்தில் ரவுடிகள் சோட்டா வினோத் (35) மற்றும் ரமேஷ் (28) ஆகியோரை போலீசார் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றனர்.
காரணை புதுச்சேரி செல்லும் பிரதான சாலையில் இன்று அதிகாலை 3.30 மணி அளவில் போலீசார் தணிக்கை பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது வேகமாக கருப்பு நிற கார் ஒன்று வந்துள்ளது. அந்தக் காரை போலீசார் நிறுத்த முயன்றபோது நிற்காமல் காவல் உதவி ஆய்வாளரை இடிப்பது போல சென்று, காவல் ரோந்து வாகனத்தில் மோதி நின்றுள்ளது.
அதிலிருந்து பயங்கர ஆயுதங்களுடன் இறங்கிய 4 பேர் கொண்ட கும்பல் போலீசாரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் உதவி ஆய்வாளர் காயமடைந்துள்ளார். போலீசார் தங்களை தற்காத்துக் கொள்ளும் விதமாக இரண்டு பேரை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். மேலும் இருவர் தப்பி ஓடியதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தில் ரவுடிகள் சோட்டா வினோத் மற்றும் ரமேஷ் கொல்லப்பட்டனர். இவர்கள் இருவர் மீதும் கொலை உள்ளிட்ட குற்றச்செயலுக்கான வழக்குகள் நிலுவையில் உள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.







