சிவகங்கை:
சிவகங்கையில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கும் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது.அதே நாளில் ஓ.பன்னீர்செல்வம் அணியினரின் போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது.
சிவகங்கையில் வரும் நாளை (சனிக்கிழமை) அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கும் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி கோரி காவல்துறையிடம் மனு அளிக்கப்பட்டிருந்தது. அதேநாளில் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் போராட்டம் நடத்த அனுமதி கேட்டிருந்தனர்.
ஒரேநாளில் இரு தரப்பும் தனித்தனியே நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கோரியது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணைக்கு வந்தது. மாலை 6 மணிக்குள் பரிசீலித்து முடிவெடுக்க சிவகங்கை டிஎஸ்பிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி பங்கேற்கும் பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி அளித்துள்ளது. அதேநேரம் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரின் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்படுவதாக காவல்துறை அறிவித்துள்ளது.
அதிமுகவின் ஒருபிரிவினர் பொதுக்கூட்டம் நடத்தும் அதேநாளில் , ஓபிஎஸ் தரப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் மற்றொரு நாளில் போராட்டத்திற்கு அனுமதி கோரும் பட்சத்தில் பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரவை மீறும் பட்சத்தில் கட்சி நிர்வாகிகள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.