1901ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியா மிகவும் வறண்ட, வெப்பமான ஆகஸ்ட் மாதத்தைக் கடந்துள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. 2023 ஆகஸ்ட் 1 முதல் 31 வரை 123 ஆண்டுகளாக இருந்ததைவிட மிகக் குறைந்த அளவே மழைப்பொழிவு இருந்தது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் புள்ளிவிவரத்தின்படி, “இந்தியாவில் 2023ஆம் ஆண்டுக்கான பருவமழையில் ஆகஸ்ட் மாதம் பெரிய அளவுக்கு மழைப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது” எனக் கூறப்படுகிறது. ஆகஸ்ட் மாதத்தில் வழக்கத்தை விட 35% மழைப்பொழிவு குறைவாக உள்ளது.
1901 க்குப் பிறகு இந்தியாவின் சராசரி மற்றும் அதிகபட்ச வெப்பநிலை ஆகஸ்ட் 2023 இல் பதிவானது. இதேபோல இரண்டாவது குறைந்தபட்ச வெப்பநிலையும் கடந்த ஆகஸ்டில் தான் பதிவாகியிருக்கிறது. பருவமழை போதி அளவு இல்லாது அதிக வெப்பநிலைக்கு முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது. ஆனால், செப்டம்பர் மாதத்திற்கான மாதாந்திர மழைப்பொழிவு பெரும்பாலும் இயல்பானதாக இருக்கும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.
தன்னார்வ வானிலை அறிவிப்பாளரான மகேஷ் பலாவத் கூறுகையில், “எல் நினோ காரணமாக, கிழக்கு பசிபிக் பெருங்கடலில் மேற்பரப்பு நீரின் அசாதாரண வெப்பமயமாதல், வங்காள விரிகுடாவில் வானிலை அமைப்பை பாதித்துள்ளது. இதன் விளைவாகவே பருவமழை குறைந்துள்ளது” என்கிறார். “இருப்பினும், இம்முறை மலையடிவாரத்தில் அதிக மழைப்பொழிவு இருந்திருக்கிறது” என்றார். காலநிலை மாற்றத்தின் எதிரொலியாக சீரற்ற வானிலை காணப்படுவதாகவும் அவர் கூறினார். இந்த ஆண்டின் மே மாதம், தலைநகர் டெல்லியில் 36 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குளிர் நிலவியது என்பது குறிப்பிடதக்கது.







