பிரான்ஸ் நாட்டின் எவியான் நகரில் ஜி7 உச்சிமாநாட்டிற்கு இடையே பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பிரிட்டன் பிரதமர் திரு கெய்ர் ஸ்டார்மரை சந்தித்து இருதரப்பு பேச்சு நடத்தினார்.கடந்த ஆண்டு இருநாட்டுப் பிரதமர்கள் மேற்கொண்ட பரஸ்பர பயணங்களுக்குப் பிறகு இந்தியா – பிரிட்டன் இடையே உள்ள வலுவான நட்புறவு குறித்து இருதலைவர்களும் ஆய்வு செய்தனர். வர்த்தகம், பொருளாதார வளர்ச்சி, ராணுவம், பாதுகாப்பு, பருவநிலை நடவடிக்கை, பசுமை எரிசக்தி, தொழில்நுட்பம், புதுமைக் கண்டுபிடிப்பு, கல்வி, மக்களுக்கு இடையேயான உறவுகள் உட்பட 2035-ம் ஆண்டு தொலைநோக்குப் பார்வையின் அனைத்து துறைகளிலும் ஏற்பட்டுள்ள வளர்ச்சிக்கு வரவேற்பு தெரிவித்தனர்.விரிவானப் பொருளாதார வர்த்தக ஒப்பந்தம் விரைவில் அமலுக்கு வருவதை தலைவர்கள் எதிர்நோக்கியுள்ளனர். கல்வித்துறையில் வலுவான கூட்டாண்மை குறித்து திருப்தி தெரிவித்த அவர்கள், பெங்களூருவில் லிவர்பூல் பல்கலைக்கழக வளாகம் அமைப்பதற்கும், மும்பையில் யார்க் பல்கலைக்கழகம், பிரிஸ்டல் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் வளாகங்களை அமைப்பதற்கும் ஏற்பட்டுள்ள சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து அவர்கள் குறிப்பிட்டனர்.நடப்பாண்டின் தொடக்கத்தில் தில்லியில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் பிரிட்டனின் வலுவான பிரதிநிதித்துவத்திற்காக பிரதமர் திரு ஸ்டார்மருக்கு பிரதமர் திரு மோடி நன்றி தெரிவித்தார். இந்தியா – பிரிட்டன் முக்கிய கனிமங்களின் உலகளாவிய விநியோக முறை கண்காணிப்பு அமைப்பு அண்மையில் தொடங்கப்பட்டது உட்பட தொழில்நுட்ப பாதுகாப்பு முன்முயற்சியின் கீழ், நடைபெற்றுள்ள சீரான வளர்ச்சிக்கும் அவர் வரவேற்பு தெரிவித்தார்.மேற்காசியா, உக்ரைன் உட்பட பரஸ்பரம் நலன் சார்ந்த பிராந்திய, உலகளாவிய வளர்ச்சிகள் குறித்தும் தலைவர்கள் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர். இந்தியா – பிரிட்டன் விரிவான உத்திசார் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த தங்களுடைய பகிரப்பட்ட அர்ப்பணிப்பை அவர்கள் மீண்டும் உறுதிப்படுத்தினார்கள்.

சட்டப் பேரவையில் ஆளுநர் அர்லேகர் உரை
தமிழக சட்டமன்றத்தில் `வணக்கம்’ எனக்கூறி உரையை தொடங்கிய ஆளுநர் அர்லேகர் தமிழக வெற்றிக்






