பெங்களூரு:
கர்நாடகாவில் மே மாதம் 10 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கின்றன. ஆளும் கட்சியாக இருந்த பாஜக, முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர் பட்டியல்களை வெளியிட்டு சூறாவளி பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றன. மீண்டும் ஆட்சியைப் பிடிக்க பாஜகவும், இழந்த ஆட்சியை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரசும் தீவிரம் காட்டி வருகின்றன.
பிரசாரத்தின்போது முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா காங்கிரஸ் தலைவர்களை நேரில் சந்திக்க நேர்ந்த போது, அவர்களின் கால்களை தொட்டு வணங்கி ஆசிர்வாம் வாங்கினார்.
49 வயதான விஜயேந்திரா, ஷிகாரிபுரா தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்காக வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன்பாக விஜயேந்திரா தனது ஆதரவார்களுடன் சித்தலிங்கேஸ்வரா கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக சென்றுள்ளார். அப்போது கோவிலில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான பரமேஸ்வராவை சந்தித்துள்ளார். உடனடியாக அவர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கியுள்ளார். பட்டியிலன வகுப்பை சேர்ந்த முன்னாள் துணை முதல்வரான பரமேஸ்வரா விஜயேந்திராவுக்கு தனது வாழ்த்துகளை கூறியுள்ளார்.
ஷிகாரிபுரா தொகுதியில் விஜயேந்திரா போட்டியிட கடும் எதிர்ப்பு எழுந்தது. முன்னாள் முதலமைச்சர் சித்தராமையாவை எதிர்த்து அவர் போட்டியிடும் வருணா தொகுதியில் போட்டியிட வேண்டும் என கட்சியினர் கொடுத்த அழுத்தங்களுக்கு மத்தியில் பாஜக மத்திய தலைமை விஜயேந்திராவுக்கு ஷிகாரிபுரா தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளித்துள்ளது. இதனால் அவர் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற முனைப்பில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
பாஜகவின் கோட்டையாக இருக்கும் ஷிகாரிபுரா தொகுதியில் இருந்து 1983 ஆம் ஆண்டு முதல் 7 முறை வெற்றி பெற்றிருக்கிறார் எடியூரப்பா. எனவே தனது மகன் இந்த தொகுதியில் போட்டியிட்டால் வெற்றி எளிதாகும் என்பதால் பாஜக தலைமையிடம் போராடி இந்த வாய்ப்பை பெற்றுள்ளார் எடியூரப்பா. ஆனால் ஷிகாரிபுரா தொகுதியை பெற்று விட வேண்டும் என கடுமையாக முயற்சி செய்த உள்ளூர் பாஜக தலைவர்களுக்கு இந்த வாய்ப்பு விஜயயேந்திராவுக்கு வழங்கப்பட்டதில் விருப்பம் இல்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் அவர்கள் அதிருப்தியில் இருப்பதாகவும் தெரிகிறது. எனவே மிக கடுமையான போராடி வருகிறார் விஜயேந்திரா. இந்த வாய்ப்பு கிடைத்தை தான் பெரும்பாக்கியமாக கருதுவதாகவும், தன் தந்தை 40 ஆண்டுகளாக சட்டமன்ற உறுப்பினராக இருந்த இந்த தொகுதியில் தானும் வெற்றி பெற விரும்புவதாகவும், தனது கனவு நனவாகம் என்றும் விஜயேந்திரா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.







