ஒடிசா ரயில் விபத்தில் பலர் உயிரிழந்த தகவல் அறிந்து மிகுந்த வேதனை அடைந்ததாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஓடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் விரைவு ரெயில், பெங்களூருவில் இருந்து கொல்கத்தா நோக்கி சென்றுகொண்டிருந்த யஸ்வந்த்பூர் ஹவுரா விரைவு ரெயில் மற்றும் சரக்கு ரயில்கள் மோதி கோர விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் ரயிலில் பயணித்த ஏராளமான பயணிகள் பலியாகியுள்ளனர். இதுவரை வெளியாகியுள்ள தகவலின்படி, 234 பேர் உயிரிழந்ததாகவும், 900 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விபத்து நடந்த பகுதியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர், மாநில பேரிடர் மீட்பு படையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள், காவல் துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ரயில் விபத்து குறித்து பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் இந்த விபத்து குறித்து அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்ததாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஒடிசாவில் நடந்த ரெயில் விபத்தில் பலர் உயிரிழந்ததை அறிந்து மிகுந்த வேதனை அடைந்துள்ளேன். மீட்புப்பணிகள் வெற்றி அடையவும், காயம் அடைந்தவர்கள் விரைவாக நலமடையவும் பிரார்த்திக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.







