திருச்சி: திமுக கூட்டணியில் இடம் பெற்றுஉள்ள காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்யும் கர்நாடகத்திடமிருந்து காவிரி நீரை பெற்றுத் தர திமுக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி குற்றம்சாட்டினார்.
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் திருவெறும்பூர் பெல் வளாகத்தில் அமைக்கப்பட்டுஉள்ள எம்ஜிஆர் முழு உருவ வெண்கல சிலை திறப்பு விழா மற்றும் பொதுக்கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. திருச்சி புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் ப.குமார் தலைமை வகித்தார். கட்சியின் பொதுச் செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான பழனிசாமி கலந்துகொண்டு சிலையை திறந்து வைத்தார்.
தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பழனிசாமி பேசியதாவது: திருச்சியில் ஓ.பன்னீர்செல்வம் நடத்திய மாநாட்டை விட, இந்தப் பொதுக்கூட்டத்தில் அதிகளவு தொண்டர்கள் கூடியுள்ளனர். இன்றைக்கும் உயிரோட்டமுள்ள கட்சியாக அதிமுக உள்ளது. அமலாக்கத் துறை, வருமான வரித் துறை நடவடிக்கையால் திமுகவில் உள்ள பல அமைச்சர்களுக்கு தூக்கமில்லை. அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு, மருத்துவமனையில் இருந்த செந்தில் பாலாஜியை பார்க்க தமிழக அமைச்சரவையே அங்கு சென்றது. அவர் வாய் திறந்தால் திமுக ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டு விடும். அதனால் தான் அவர்கள் அங்கு சென்றனர்.
அதிமுக ஆட்சியில் புதிதாக 11 மருத்துவக் கல்லூரிகள் கொண்டு வரப்பட்ட நிலையில், திமுக ஆட்சியில் 3 மருத்துவ கல்லூரிகளுக்கு மூடுவிழா காணக்கூடிய அளவுக்கு அலட்சியமாக உள்ளனர். திமுக தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி நீட் தேர்வு விலக்குக்கு கையெழுத்து போட அவருக்கு நேரமில்லைபோலும். 52 சதவீத மின்கட்டணம் உயர்வால் தொழில்நிறுவனங்களுக்கு மட்டுமின்றி, பொதுமக்களுக்கும் ஷாக் அடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
திமுக கூட்டணியில் இடம் பெற்று உள்ள காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்யும் கர்நாடகத்திடமிருந்து காவிரியில் நீர் பெற்று தர தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. ராகுல்காந்தியை பிரதமராக ஆக்க குரல் கொடுக்கும் முதல்வர் ஸ்டாலின், காவிரி பிரச்சினைக்கு குரல் கொடுக்காதது ஏன்? என்று எடப்பாடி தெரிவித்தார்.
கூட்டத்தில், அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி, சி.வி.சண்முகம், திண்டுக்கல் சீனிவாசன், சி.விஜயபாஸ்கர், ஆர்.காமராஜ், ஆர்.வி.உதயக்குமார், எம்.ஆர்.விஜயபாஸ்கர், செல்லூர் ராஜூ, நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






