சென்னை:
சென்னை சைதாப்பேட்டை ஜீனிஸ் சாலையின் இருபுறங்களிலும் ஆக்கிரமிப்பால் போக்குவரத்துக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து போக்குவரத்து துறையும், சென்னை மாநகராட்சியும் நடவடிக்கை எடுக்குமா என்று கோரிக்கை எழுந்துள்ளது.
சென்னையின் முக்கிய பகுதிகளில் சைதாப்பேட்டையும் ஒன்று. இது மக்கள் நிறைந்த பகுதியாகும். அண்ணாசாலையில் இருந்து கே.கே.நகர், கோயம்பேடு, கிண்டி, வடபழனி உள்ளிட்ட முக்கிய சாலைகளை இணைக்கும் பகுதியாகும். இப்படி முக்கியத்துவம் வாய்ந்த சைதாப்பேட்டை கலைஞர் வளைவில் இருந்து ஜீனிஸ் சாலை முழுவதும் சாலையோரங்களின் இருபுறங்களிலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த சாலையில் சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை, சென்னை மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனை, சைதாப்பேட்டை மீன் மார்க்கெட் மற்றும் சைதாப்பேட்டை ரயில் நிலையம் ஆகியவை உள்ளதால் இச்சாலை மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியாக உள்ளது.
இவற்றை பயன்படுத்தி ஜீனிஸ் சாலையில் இருபுறங்களிலும் சாலையோர கடைகள் ஏராளமான முளைத்துள்ளன. அதாவது மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், ரயில் நிலையங்களுக்கு வருபவர்களை குறிவைத்து இதுபோன்ற சாலையோர கடைகள் முளைத்துள்ளன. இதே போல் எஸ்.எஸ்.பிரியாணி போன்ற பெரிய ஓட்டங்களும் இங்கு அமைந்துள்ளன. இதனால் சாலை ஓரங்களில் ஏராளமான வாகனங்கள் நிறுத்தி ஆக்கிரமித்துள்ளன. இதனால் 100 அடி சாலையாக உள்ள இச்சாலை தற்போது 20 அடி அளவாக சுறுங்கியுள்ளது.
மருத்துவமனைகள் உள்ள இச்சாலைக்குள் விபத்துக்குள்ளானவர்கள், கர்ப்பிணிகளை ஏற்றிவரும் ஆம்புலன்ஸ் உள்ளே நுழைவதற்கே மிகுந்த சிரமப்படுகிறது. இதனால் நோயாளிகள் அவதிக்குள்ளாகின்றனர். இதுமட்டும் இல்லாமல் சாலையில் மக்கள் நடக்க முடியாத அளவிற்கு வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்கின்றன. இதுதொடர்பாக போக்குவரத்துத்துறையும், சென்னை மாநகராட்சி அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தாம்பரம் மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா
தாம்பரம் மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் வட்டம் திருநீர்மலை கிராமம்






