சண்டிகர்:
இந்தியாவில் எச்3என்2 வகை இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் பாதிப்பு காரணமாக 2 பேர் உயிரிழந்தனர்.
முதல் மரணம் கர்நாடக மாநிலத்தில் பதிவு, 2வது மரணம் அரியானா மாநிலத்தில் பதிவாகியுள்ளது. நாடு முழுவதும் இதுவரை 90 பேருக்கு இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் புதிதாக எச்3என்2 வகை இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் வேகமாக பரவிவருவதாக கூறப்படுகிறது. இதுவரை 90 பேருக்கு இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் துணை வகையான எச்1என்1 வைரஸால் 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் எச்3என்2 வகை இன்ஃப்ளூயன்ஸாவால் பாதிக்கப்பட்ட கர்நாடகா, அரியானா ஆகிய மாநிலத்தை சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது வெப்பக்காலம் தொடங்கியுள்ளதால் பெரும்பாலும் வைரஸின் பாதிப்பு அதிகரித்து வருவதால் மாநில அரசுகள் இதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் காய்ச்சல், சளி போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவமனையை அணுக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இன்ஃப்ளூயன்ஸா வைரஸின் அறிகுறிகள்: மூச்சுத்திணறல், மூச்சு விடுவதில் சிரமம், விடாத தீவிர காய்ச்சல், நெஞ்சுப்பகுதியில் வலி, தலைசுற்றல், வலிப்பு ஆகியவை ஆகும்.






