அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனைக்கு மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. சென்னை சைதாப்பேட்டையில் அமைச்சர் பொன்முடி வீட்டில் காலை 7 மணி முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். செம்மண் குவாரி தொடர்பாக 2012ல் தொடரப்பட்ட வழக்கில் 11 ஆண்டுக்கு பிறகு தற்போது சோதனை நடத்தப்பட்டு வருகிறது. விழுப்புரம் சண்முகபுரத்தில் உள்ள அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனைக்கு மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. அமைச்சர் பொன்முடி வீட்டில் நடத்தப்படும் சோதனை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அமலாக்கத்துறை மூலம் திமுகவை அச்சுறுத்த முடியாது. சோதனை நடத்தி திமுக மீது களங்கத்தை ஏற்படுத்த பாஜக முயற்சிக்கிறது என்று கண்டனம் தெரிவித்தார்.
விலைவாசி உயர்வு பிரச்சனையில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப ஒன்றிய அரசு முயற்சிக்கிறது என்றும் கடுமையாக பா.ஜ.க வை சாடினார். இதேபோல் அமலாக்கத்துறை சோதனைக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் கண்டனம் தெரிவித்துள்ளது. எதிர்கட்சிகளை பலவீனப்படுத்துவதன் மூலம் மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடலாம் என்று பாஜக கனவு காண்கிறது. பெங்களூருவில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெறும் நிலையில் அமலாக்கத்துறை சோதனை நடத்துகிறது. எதிர்கட்சிகளை அச்சுறுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அமலாக்கத்துறையை ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்துகிறது என்று முத்தரசன் கண்டனம் தெரிவித்தார்.






