குடியரசுத் துணைத் தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன், இன்று (09.07.2026) புவனேஸ்வரில் உள்ள தேசிய அறிவியல் கல்வி – ஆராய்ச்சி நிறுவனத்தின் 15-வது பட்டமளிப்பு விழாவில் உரையாற்றினார். இளம் விஞ்ஞானிகள் நேர்மை, சமூகப் பொறுப்பு ஆகிய உயர்ந்த தரங்களைக் கடைப்பிடித்து, தேசத்தைக் கட்டியெழுப்புவதற்காக அறிவியலையும் புத்தாக்கத்தையும் பயன்படுத்த வேண்டும் என்று அப்போது அவர் வலியுறுத்தினார்.
அறிவியல், புத்தாக்கம், அறிவுசார் தலைமைத்துவம் ஆகியவற்றில் இந்தியாவின் இலக்குகளை அடைவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் ஒரு நிறுவனமாக தேசிய அறிவியல் கல்வி – ஆராய்ச்சி நிறுவனம் திகழ்கிறது என்று அவர் கூறினார். அறிவியல் கல்விக்கும், ஆராய்ச்சிக்குமான ஒரு முதன்மை மையமாக இது உருவெடுத்துள்ளது என்றும், நாட்டிற்கு உயர் திறன்கொண்ட அறிவியல் பணியாளர்களை உருவாக்குவதில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
அறிவியல் அறிவை உருவாக்குவதோடு மட்டுமல்லாமல், கொள்கைகளுக்கு வழிகாட்டி, நிலைத்தன்மையையும் உறுதி செய்ய வேண்டும் என்று அவர் கூறினார். மக்கள்தொகை வலிமை கொண்ட இந்தியா போன்ற ஒரு நாட்டிற்கு, அறிவியல் திறன் என்பது ஒரு விருப்பத் தேர்வு அல்ல எனவும், 20047 ஆம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற இலக்கை அடைவதற்கு அது அடித்தளமாக உள்ளது என்றும் அவர் கூறினார்.
இந்த விழாவில் ஒடிசா ஆளுநர் திரு ஹரி பாபு கம்பம்பதி, ஒடிசா முதலமைச்சர் திரு மோகன் சரண் மாஜி, மத்திய கல்வித்துறை அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், மத்திய அறிவியல் – தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், மூத்த அதிகாரிகள், பேராசிரியர்கள், பட்டம் பெறும் மாணவர்கள், பெற்றோர், சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.







