கள்ளச்சாராய, விஷச் சாராய வழக்குகளில் தொடர்புடையவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது எப்படி? என தமிழ்நாடு சட்டப்பேரவை பொது கணக்கு குழு தலைவர் செல்வபெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு சட்டப்பேரவை பொது கணக்கு குழு தலைவர் செல்வபெருந்தகை, “நவீன விஞ்ஞான வளர்ச்சி அடைந்திருக்க கூடிய இந்த காலகட்டத்தில் இதுபோன்ற இரயில் விபத்து நடக்க அனுமதித்திருக்கக் கூடாது. ஒன்றிய அரசு இதில் கவனம் செலுத்தவில்லை. பாதுகாப்பு குறைபாடுகள் இருக்கின்றன. காங்கிரஸ் ஆட்சியின் போது ரயில்வேக்கு என்று தனியாக நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இப்போது ரயில்வே நிதிநிலை அறிக்கையை மோடி அரசு எடுத்து விட்டது.
ரயில்வே துறைக்கு நிதி ஒதுக்குவதில் குளறுபடிகளும், குறைபாடுகளும் இருக்கின்றன. மூன்று மாதங்களுக்கு முன்பு கண்ட்ரோலர் ஜெனரல் விபத்து நடப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக சுட்டிக்காட்டி இருக்கிறார். ரயில்வே துறை அதிகாரிகளே கடிதம் எழுதி இருக்கிறார்கள். கர்நாடகாவில் ஒரு மிகப்பெரிய ரயில் விபத்து தவிர்க்கப்பட்டிருக்கிறது. இப்படி இருந்தும் இதைப் பற்றி கவலைப்படாமல் ஒன்றிய அரசு விளம்பரங்களிலே ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்கள். தற்போது பாதுகாப்பற்ற முறையில் தான் பயணங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்கு தார்மீக பொறுப்பேற்று ரயில்வே துறை அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும்.
சிபிஐ விசாரணை என்பது போதாது உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி, நீதிபதிகளின் தலைமையில், இந்த விசாரணை நடைபெற்றால் தான் உண்மை வெளியில் வரும். அதை தவிர்த்து சிபிஐயிடம் ஒப்படைத்தால் இவர்கள் என்ன சொல்கிறார்களோ? அதைத்தான் அவர்கள் சொல்லி இந்த வழக்கை முடித்து வைப்பார்கள். கள்ளச்சாராய, விஷச் சாராய வழக்குகளில் எப்படி கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது? அதேபோன்று ரயில் விபத்திற்கு காரணமானவர்கள் மீதும் கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும்” என்று தெரிவித்தார்.






