சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்), 2026 கல்வியாண்டில் பிஎஸ் பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கைத் தொடங்கியுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க 2026 மே 31-ம் தேதி கடைசி நாளாகும். உயர்தரமான ஐஐடி கல்வியை அதிகளவிலும், பல்வேறு பின்னணியில் உள்ள மாணவர்களுக்கும் எளிதில் கிடைக்கச் செய்வதற்காக வடிவமைக்கப்பட்ட இப்படிப்புகள், வயது வரம்பின்றி 12-ம் வகுப்பு முடித்த அனைவரும் படிக்கக் கூடியவையாக அமைந்துள்ளன.
இந்த பட்டப்படிப்புகள் 4 தனித்துவமான பிரிவுகளாக வழங்கப்படுகின்றன. பிஎஸ் தரவு அறிவியல் மற்றும் பயன்பாடுகள், பிஎஸ் மின்னணுப் பயன்பாடுகள், பிஎஸ் மேலாண்மை மற்றும் தரவு அறிவியல், பிஎஸ் வானியல் மற்றும் விண்வெளித் தொழில்நுட்பம் ஆகியவை தனி பட்டப்படிப்பாகவோ வழக்கமான கல்லூரி பட்டப்படிப்புடன் இணைத்தோ படிக்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இப்படிப்புகள் பெரும்பாலும் ஆன்லைன் முறையில் நடத்தப்படுகின்றன. கல்வியின் தரத்தையும் நெகிழ்வுத்தன்மையையும் உறுதிப்படுத்த நாடு முழுவதும் பல்வேறு மையங்களில் நேரடி தேர்வுகள் நடத்தப்படுகின்றன. மாணவர்கள் தங்களது வசதிக்கேற்ப படிப்பை தொடர முடியும். அவர்களின் கல்வி, தொழில் நோக்கங்களுக்கு ஏற்ப சான்றிதழ், பட்டயம், பட்டப்படிப்பு வழங்கப்படுகின்றன.






