சென்னை:
கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பல்வேறு செயல் திட்டங்களை தி.முக. அரசு செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக சைதாப்பேட்டையின் அடையாளமான கலைஞர் பொன்விழா வளைவை புதுப்பிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இப்பணி நிறைவடைந்து இதன் திறப்பு விழா நேற்று (18ம் தேதி) கொட்டும் மழையிலும் நடைபெற்றது. தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புதுப்பிக்கப்பட்ட பொன்விழா வளைவினை திறந்து வைத்தார்.
மழைக்கு நடுவே வருகை தந்த அவர், திரண்டிருந்த மக்கள் வெள்ளத்திற்கு நடுவே அவர் பேசுகையில், மழை காரணமாக இந்த நிகழ்ச்சி நடக்குமா? நடக்காதா? என்று நினைத்திருந்தேன். ஆனால் அமைச்சர் மா.சுப்பிரமணியன் சிறப்பாக நடத்திக்காட்டியுள்ளார். நான் அரசியலுக்கு வந்த புதிதில் 2019ம் ஆண்டு மத்திய ஒன்றிய அரசு சிஏ சட்டத்தை அமல்படுத்தியது. இதனை எதிர்த்து முதல் போராட்டம் நடத்தியபோது நான் சைதாப்பேட்டையில் கைது செய்யப்பட்டேன். சைதாப்பேட்டை மிகவும் முக்கியமான தொகுதி.
தி.மு.க. முன்னாள் தலைவர் கருணாநிதி, பல தொகுதிகளில் போட்டியிட்டிருந்தாலும் சைதாப்பேட்டையில் போட்டியிட்டபோதுதான் முதலமைச்சரானார். அந்த அளவிற்கு சைதாப்பேட்டை தி.மு.கவிற்கு மிகவும் நெருக்கமான தொகுதி.
திமுக ஆட்சியில் பள்ளியில் 1 முதல் 5ம் வகுப்பு வரை வழங்கப்படும் காலை உணவுத் திட்டத்தால் 17 லட்சம் மாணவர்கள் பயனடைகிறார்கள். இதனால் பெற்றோர் நிம்மதியாக உள்ளனர்.
அரசு பள்ளியில் படித்து கல்லூரிக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதம் ஊக்கத்தொகையாக மாதம் ரூ.1000 (புதுமைப்பெண் திட்டம்) நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த மழைக்கு நடுவிலும் கலைஞர் பொன்விழா வளைவு திறக்க சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்களை கூறுகிறேன். என்றார்.







