இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2024னை முன்னிட்டு, 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில், சென்னை மாவட்டத்தில் 3 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக ரிப்பன் கட்டட வளாகக் கூட்டரங்கில் நடைபெற்ற பல்வேறு கல்லூரிகளின் மாணவ, மாணவியரிடையே தேர்தல் குறித்த வினாடி வினாப் போட்டியினை (Quiz Programme) மாவட்ட தேர்தல் அலுவலர்/கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்து, பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்த மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி, மாணவர்களுடன் கலந்துரையாடி விழிப்புணர்வினை ஏற்படுத்தினார். இந்த வினாடி வினாப் போட்டியில் சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 30 கல்லூரிகளிலிருந்து ஒரு குழுவிற்கு 2 நபர்கள் என 150 குழுவாக 300 மாணவர்கள் கலந்து கொண்டனர். இக்குழுக்களிலிருந்து தேர்தல் குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சிறப்பாகப் பதிலளித்த 12 குழுக்களைத் தேர்வு செய்து, அவர்களுக்கிடையே நடைபெற்ற புதிர் போட்டியில் சிறப்பாக பதிலளித்து தேர்வு செய்யப்பட்ட லயோலா கல்லூரியைச் சார்ந்த குழுவிற்கு முதல் பரிசாக ரூ.20,000/-மும், சென்னை மருத்துவக் கல்லூரியைச் சார்ந்த குழுவிற்கு ரூ.10,000/-மும், எஸ்.எஸ்.என். கல்லூரியைச் சார்ந்த குழுவிற்கு ரூ.5000/- மும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அவர் பேசும்போது தெரிவித்ததாவது: கல்லூரிகளில் பயிலும் முதல் முறையாக வாக்களிக்கும் மாணவர்கள் தங்களின் வாக்கினை தவறாமல் செலுத்தி 100% வாக்களிப்பினை உறுதி செய்ய வேண்டும். உங்கள் பெற்றோர்கள், நண்பர்கள், உறவினர்கள் மற்றும் அருகிலுள்ள அனைவருக்கும் 19.04.2024 அன்று நடைபெற உள்ள தேர்தலில் தவறாமல் வாக்கினை செலுத்திட விழிப்புணர்வினை ஏற்படுத்திட வேண்டும். இந்த தேர்தலில் மாணவர்களாகிய நீங்கள் பங்களிப்பினை முழுமையாக செலுத்திட வேண்டும் எனத் தெரிவித்தார். உங்கள் இந்நிகழ்ச்சியில், மாவட்ட தேர்தல் அலுவலர் ச.சுரேஷ் மற்றும் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.