டெல்லி பல்கலைக்கழக நூற்றாண்டு நிறைவு விழா இன்று நடந்தது. இதில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி இன்று காலை டெல்லி மெட்ரோ ரெயியில் பயணம் செய்தார்.முன்னதாக ரெயில் நிலையத்தில் இருந்த தானியங்கி எந்திரத்தில் மற்ற பயணிகளை போல அவர் டிக்கெட் எடுத்தார். பின்னர் அந்த டிக்கெட்டை அங்குள்ள நுழைவு வாயிலில் காட்டி உள்ளே சென்றார். தானியங்கி படிக்கட்டு மூலம் சென்ற பிரதமர் மோடி பிளாட் பாரத்தில் ரெயில் வருகைக்காக சிறிது நேரம் காத்திருந்தார்.
மெட்ரோ ரெயில் வந்ததும் பிரதமர் மோடி அதில் ஏறி பயணிகளுடன் அமர்ந்தார். பிரதமரை பார்த்ததும் ரெயிலில் இருந்த பயணிகள் உற்சாகம் அடைந்தனர். சாதாரண மனிதரை போல அவர் அருகில் இருந்த பயணிகளுடன் பேசியபடி கலந்துரையாடினார். சிறிது நேர பயணத்திற்கு பிறகு பிரதமர் மோடி டெல்லி பல்கலைக்கழகம் வந்தடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கிருந்து வெளிநாட்டை சேர்ந்த மாணவ-மாணவிகளுடன் அவர் கலந்துரையாடினார். பின்னர் அவர் பல்கலைக்கழக நூற்றாண்டு விழாவில் பங்கேற்றார். விழாவில் அவர் டெல்லி பல்கலைக்கழகத்தில் கணினி மையம், மற்றும் அகாடமி கட்டிடம் உள்ளிட்ட 3 புதிய கட்டிடங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். பல்வேறு திட்டப்பணிகளையும் அவர் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். .







