தமிழக முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு ஏப்ரல் 29ம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிகள் 6 முதல் 12ம் வகுப்புகளுக்கு ஜூன் 1ம் தேதியும், 1 முதல் 5ம் வகுப்புகளுக்கு ஜூன் 5 ஆம் தேதியும் திறக்கப்படுமென அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளி திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டு வந்தது.
இதையடுத்து கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மாணவர்களின் உடல்நலத்தைக் கருத்தில் கொண்டு ஜூன் மாதம் 7-ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்தார்.
இந்நிலையில் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் என்னும் குறையாததால் பள்ளிகளுக்கான விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினரும் கருத்து கூறி வருகின்றனர். வெயிலின் காரணத்தினால் பள்ளிகளை திறப்பது குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் எனவும் பள்ளி திறப்பை மேலும் தள்ளி வைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. எனினும் பள்ளிகள் திறப்பை தள்ளி வைப்பது தொடர்பாக இதுவரை முடிவு எடுக்கப்படவில்லை. சில மாவட்டங்களில் வெயில் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இதுகுறித்த தகவல்கள் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுடன் ஆலோசித்து இறுதி முடிவை அமைச்ச விரைவில் மேற்கொள்வார் என்று பள்ளிக்கல்வித்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







