மராட்டிய மாநிலம் யவத்மாலில் இருந்து புனே நோக்கி 32 பயணிகளுடன் தனியார் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. பேருந்து சம்ருத்தி மஹாமார்க் நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, அப்பொழுது தீடீர் என பேருந்தின் டயர் வெடித்ததில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கவிழ்ந்து தீப்பிடிக்க தொடங்கியது.

பேருந்து மளமளவேன தீப்பிடித்ததால், அதில் இருந்த பயணிகளில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சிலர் பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகாலை 2 மணியளவில் இந்த பயங்கர சம்பவம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இதுகுறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இந்த சூழலில், பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அம்மாநில முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே நிவாரணம் அறிவித்துள்ளார். உயிரிழந்த 26 பேரின் குடும்பத்திற்கும் தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்றும், காயமடைந்தவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும் என்றும் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து பிரதமர் மோடி பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் மற்றும் நிவாரணம் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “மராட்டிய மாநிலம் புல்தானாவில் பேருந்து விபத்துக்குள்ளானதில் ஆழ்ந்த வருத்தம். எனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உள்ளூர் நிர்வாகம் அனைத்து உதவிகளையும் வழங்கி வருகிறது. உதவித் தொகையாக புல்தானாவில் பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு PMNRF-ல் இருந்து 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாய் வழங்கப்படும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு, காயமடைந்தவர்களை மருத்துவமனையில் இன்று நேரில் சந்திக்க உள்ளனர். இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மராட்டிய துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், “சம்ருத்தி நெடுஞ்சாலையில் பேருந்து விபத்துக்கு சாலை கட்டுமானம் காரணமல்ல.. பேருந்து விபத்து சம்பவத்தில் தேவைப்பட்டால் டிஎன்ஏ பரிசோதனை மூலம் உடல்கள் அடையாளம் காணப்படும்” என்று கூறினார்.






