ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த சிக்கரசம் பாளையத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் தனது 3 ஏக்கர் தோட்டத்தில் மல்லிகை சாகுபடி செய்து வருவதோடு, கால்நடைகளையும் பராமரித்து வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் தனது தோட்டத்து கொட்டகையில் 4 செம்மறி ஆடுகளை கட்டி தீவனம் போட்டு விட்டு ஊருக்கு சென்று விட்டார்.நேற்று காலை வந்து பார்த்த போது கொட்டகையில் கட்டி இருந்த 4 செம்மறி ஆடுகள் மர்ம விலங்கு கடித்து இறந்திருப்பதை கண்டு கடும் அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து சத்தியமங்கலம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் பதிவான கால் தடத்தை வைத்து விசாரணை நடத்தியதில் அந்த கால் தடம் சிறுத்தை உடையது என்பதை உறுதி செய்தனர். இதனால் அப்பகுதி மக்கள் கடும் பீதி அடைந்துள்ளனர். மீண்டும் ஆட்டை தேடி சிறுத்தை ஊருக்குள் எந்த நேரத்திலும் வரலாம் என்பதால் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர். உடனடியாக கூண்டு வைத்து சிறுத்தை பிடிக்க வேண்டும் என வனத்துறைக்கு கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து அந்தப் பகுதியில் வனத்துறையினர் 4 கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி சிறுத்தை நடமாட்டத்தைக் கண்காணித்து வருகிறார்கள்.






