போதை பொருள் கடத்தலுக்கு உடந்தையாக செயல்பட்டதாக 18 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுயுள்ளனர் என்றும் மேலும் இதில் 10 பேர் சிறைக்கு அனுப்பப் பட்டுள்ளதாகவும் தமிழக போலீஸ் டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்தார்.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில், மறவன்குடியிருப்பு பகுதியில் உள்ள போலீஸாரின் ஆயுதப்படை மைதானத்தில் இன்று போதை ஒழிப்பு குறித்த தோல்பாவை கூத்து மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் தமிழக போலீஸ் டிஜிபி சைலேந்திரபாபு கலந்து கொண்டார்.

அதன் பின்னர் நெல்லை கன்னியாகுமரி தூத்துக்குடி தென்காசி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு, களவு போய் மீட்கப்பட்ட 300 மொபைல் போன்களை அதன் உரிமையாளர்களுக்கு வழங்கினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த டிஜிபி தமிழகத்தில் 281 எல்லை காவல் நிலையங்களில் போதை பொருள் இல்லை என்ற நிலையை உருவாக்கப்பட்டுள்ளது. இதுவரை போதைப்பொருள் கடத்திய 2861 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 54 டன் போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. 28 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
80 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், போதை பொருள் கடத்தலுக்கு உடந்தையாக செயல்பட்ட 18 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதில் 10 பேர் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். போதை பொருள் கடத்தலுக்கு எதிராக காவல் துறை நடவடிக்கை தீவிரமாக எடுத்துள்ளது என்று டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்தார்.






