ராய்ப்பூர்:
சட்டீஸ்கரில் நடந்த போலீஸ் என்கவுன்டரில் 3 நக்சல்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டீஸ்கர் மாநிலம் தண்டேவாடா மாவட்டம் கடேகல்யாண காவல் நிலையத்திற்குட்பட்ட டப்பகுன்னா கிராமத்திற்கு அருகிலுள்ள மலையில், நக்சல்கள் பதுங்கி இருப்பதாக சிறப்பு படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து சம்பவ இடத்தை சுற்றிவளைத்த போலீசாருக்கும், பதுங்கியிருந்த நக்சல்களுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில், மூன்று நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
இதுகுறித்து உயர் அதிகாரிகள் தெரிவிக்கையில், ‘துமக்பால் – டப்பகுன்னா இடையே இருக்கும் வனப்பகுதியில் போலீசார் – நக்சல்கயிடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. துப்பாக்கிச் சூடு நிறுத்தப்பட்டதை அடுத்து, சீருடையில் இருந்த மூன்று ஆண் நக்சல்கள் உடல் சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்டன. என்கவுன்டர் நடந்த இடத்தில் இருந்து வெடிபொருட்கள், ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும் தேடுதல் வேட்டை தொடரும் என தெரிவித்தார்.






