இந்தியா,அமெரிக்கா, ரஷ்யா உட்பட 20 நாடுகள் இணைந்து ஜி20 கூட்டமைப்பை உருவாக்கியுள்ளன. 2023-ல் ஜி20 கூட்டமைப்புக்கு இந்தியா தலைமையேற்றுள்ளது. இதையொட்டி ஜி-20 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் பல்வேறு துறைகளின் பணிக்குழு கூட்டம் நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் நடத்தப்பட்டு வருகிறது.அதன்படி கல்வி, நிதி, மகளிர் மேம்பாடு சார்ந்த பணிக்குழு கூட்டம் சென்னையில் நடத்தப்பட்டது. தொடர்ந்து பேரிடர் அபாயத் தணிப்பு பணிக்குழுவின் இறுதி கூட்டம் சென்னையில் நேற்று தொடங்கியது. இந்த மாநாடு இன்றுடன் நிறைவடைகிறது.
இந்தநிலையில் ஜி20 சுற்றுச்சூழல் பாதுகாப்பு மாநாடு சென்னை கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா ஓட்டலில் இன்று தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது. இந்த மாநாட்டில் ஜி20 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் 135 பேர் பங்கேற்கின்றனர். ஜி20 கூட்டமைப்பில் இல்லாத நாடுகளைச் சேர்ந்த 32 பேர் விருந்தினர்களாக பங்கு பெறுகின்றனர். இதுதவிர சர்வதேச அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகள் 23 பேர் கலந்து கொள்கின்றனர்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மேம்பாடு, பல்லுயிர் பெருக்கத்தை மேம்படுத்துதல் மற்றும் சுற்றுச்சூழல் மறுசீரமைப்பை விரைவுபடுத்துதல், காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் சீரழிவின் பரிமாண சவாலை சமாளிக்க மேற்கொள்ள வேண்டிய பணிகள், உலகளவில் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பேரழிவுகள், அவற்றை தவிர்க்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்த மாநாட்டில் விரிவாக விவாதிக்கப்படுகிறது.






