தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாகவே தக்காளி விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. ஒரு கிலோ ரூ.130 வரை விற்கப்பட்ட தக்காளி பின்னர் கடந்த வாரம் சற்று குறைந்து ரூ.100-க்கு விற்கப்பட்டது. மேலும் பண்ணை பசுமை கடைகள் மற்றும் ரேஷன் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதையடுத்து வரும் நாட்களில் வரத்து அதிகரித்து தக்காளி விலை படிப்படியாக குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தக்காளி விலை குறையாமல் தொடர்ந்து உச்சத்திலேயே இருந்து வருகிறது. நேற்று கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து குறைந்ததால் விலை மீண்டும் அதிகரிக்க தொடங்கியது. நேற்று ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.30 அதிகரித்தது.
இந்த நிலையில் இன்றும் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து மேலும் குறைந்து உள்ளது. 23 லாரிகளில் மட்டுமே தக்காளி விற்பனைக்கு வந்து உள்ளன. வழக்கமாக கோயம்பேடு மார்க்கெட்டுக்கு சுமார் 60 லாரிகளில் தக்காளி விற்பனைக்கு வரும். இந்த மாத தொடக்கத்தில் விலை அதிகரிக்க தொடங்கியது முதலே கோயம்பேடு மார்க்கெட்டுக்கு 30 முதல் 35 லாரிகளில் மட்டுமே தக்காளி விற்பனைக்கு வந்தன. இன்று முதன் முதலாக தக்காளி வரத்து 30 லாரிகளுக்கும் கீழ் குறைந்துவிட்டது. தக்காளி வரத்து குறைவு காரணமாக மார்க்கெட்டில் உள்ள சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.140-க்கும், வெளி மார்கெட்டில் உள்ள காய்கறி, மளிகை மற்றும் சூப்பர் மார்க்கெட் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.150-ஐ கடந்தும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதே நிலை நீடித்தால் ராக்கெட் வேகத்தில் தக்காளி விலை தினசரி அதிகரித்து கிலோ ரூ.200-ஐ எட்டும் வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர். கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து தக்காளி விற்பனைக்கு வருகிறது. வழக்கமாக தினசரி 60-க்கும் மேற்பட்ட லாரிகளில் விற்பனைக்கு குவிந்து வரும். தக்காளியின் வரத்து கடந்த ஒரு மாதமாக 40-க்கும் குறைவான லாரிகளில் மட்டுமே வருவதால் அதன் விலை திடீரென அதிகரிக்க தொடங்கியது. நேற்று 30 லாரிகளில் விற்பனைக்கு வந்த தக்காளியின் வரத்து இன்று மேலும் குறைந்து 23 லாரிகளாக சரிந்துவிட்டது. அதுவும் ஒவ்வொரு லாரியிலும் 10 டன் என்கிற முழு கொள்முதல் அளவில் தக்காளி வரவில்லை. 7 முதல் 8 டன் என்கிற அளவிலேயே வந்துள்ளது. இதனால் தக்காளிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விலை மேலும் உச்சத்தை எட்டும். மேலும் வடமாநிலங்களில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் அந்த மாநில வியாபாரிகள் தக்காளியை அதிக அளவில் கொள்முதல் செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர். இதனால் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரும் தக்காளியின் வரத்து நாளுக்கு நாள் குறைந்து விலையும் அதிகரிக்கிறது. இந்த தக்காளி விலை உயர்வால் குடும்ப தலைவிகள் தங்கள் மாதாந்திர செலவினங்களில் தக்காளிக்கென்று கணிசமான தொகை செலவிட வேண்டியுள்ளது என்று கவலை தொரிவித்துள்ளனர்.







