திருச்சி:
காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழை பெய்ததால் கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்டுள்ள உபரிநீர் தமிழகத்தை நோக்கித் வந்துகொண்டிருக்கிறது. இதனால் டெல்டா மாவட்ட விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ஆண்டுதோறும் இந்த பருவத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி செய்வது வழக்கம். இதற்கு காவிரி ஆற்றையே மக்கள் நம்பியுள்ளனர். ஆண்டுதோறும் ஓரளவாவது தண்ணீர் கிடைக்கும். ஆனால் இந்த ஆண்டு அதுகூட கிடைக்கவில்லையே என்று விவசாயிகள் ஏங்கித் தவித்து வந்தனர்.
மேட்டூர் அணையில் நீர்மட்டம் 79 அடிக்கும் குறைவாக இருந்ததால், இந்த ஆண்டு வழக்கமான தேதியான ஜூன் 12-ஆம் தேதி பாசனத்திற்குத் தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, தமிழகத்திற்கு உரிய காவிரி நீரைத் திறந்துவிடுமாறு காவிரி ஒழுங்காற்றுக் குழு உத்தரவிட்டது. 15 நாட்களுக்குத் வினாடிக்கு 3,500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கக் குழு அறிவுறுத்தியபோதிலும் கர்நாடகம் அதனை ஏற்க மறுத்தது.
காவிரி மேலாண்மை ஆணையத்தில் கர்நாடகம் முறையீடு செய்த நிலையில், ஆணையமும் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்திற்குத் தண்ணீர் திறக்குமாறு கடந்த ஜூலை 24-ல் உத்தரவிட்டது.
மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுக்குக் கர்நாடகத்தில் எதிர்ப்புகள் கிளம்பின. இதனிடையே, இரு மாநிலப் பேச்சுவார்த்தைக்காகத் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் மற்றும் கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமார் ஆகியோர் பெங்களூருவில் சந்தித்துப் பேசத் திட்டமிடப்பட்டது.
இருப்பினும், இதற்குத் தமிழக எதிர்க்கட்சிகளும் கர்நாடக அமைப்புகளும் எதிர்ப்புத் தெரிவித்ததால் இந்தச் சந்திப்பு தள்ளிவைக்கப்பட்டது. இரு மாநிலங்களிடையே காவிரி விவகாரத்தில் அரசியல் பிணக்கு நீடித்து வந்த சூழலில், கடந்த ஜூலை 31-ஆம் தேதி காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் கர்நாடகாவில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிவேகமாக அதிகரித்தது.
பாதுகாப்பு கருதி கபினி அணையில் இருந்து உபரிநீர் திறந்து விடப்பட்ட நிலையில், தற்போதைய நிலவரப்படி தமிழக எல்லைக்கு வினாடிக்கு 28,000 கனஅடி நீர் வந்துகொண்டிருக்கிறது.
தற்போது கர்நாடக அணைகளான கிருஷ்ணராஜசாகரில் 91.8 அடியும், கபினியில் 56.28 அடியும், ஹேரங்கியில் 127.55 அடியும், ஹேமாவதியில் 100.98 அடியும் தண்ணீர் உள்ளது.
அணைகள் வேகமாக நிரம்பி வருவதால், தமிழகத்திற்கான தண்ணீர் திறப்பு மேலும் அதிகரிக்கக் கூடும். தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 73.82 அடியாக உள்ள நிலையில், காவிரி நீர் அணையை வந்தடையும் போது நீர்மட்டம் வேகமாக உயரும். இது அடுத்து வரவிருக்கும் சம்பா சாகுபடிக்கு உறுதுணையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தவெக அரசுக்கு ரீல்ஸ் வெறி முத்திப்போய் உள்ளது: உதயநிதி
தஞ்சாவூர்:தஞ்சாவூரில் இன்று திமுக சார்பில், தவெக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில்






