மதுரை:
மதுரையில் அதிக வெப்ப அபாயம் உள்ளதாக ஆக்ஸ்போர்டு ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது.. இந்நிலையில், “பசுமை மதுரை செயல்திட்டம்” அமல்படுத்தக் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை விசாரித்தது. வைகை கரை ஆக்கிரமிப்பு அகற்றம், ரிங் ரோடு மரக்கன்றுகள் நடுதல் மற்றும் வெப்ப அலை தடுப்புத் திட்டம் தொடர்பாக அரசு பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளை நீதிபதிகள் அதிரடியாக உத்தரவிட்டுள்ளனர்.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் வெளியிட்ட ஆய்வறிக்கையில், உலகம் முழுவதும் பெருத்த கவனத்தை ஈர்த்துள்ளது. 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வாழும் 205 முக்கிய நகரங்களை ஆய்வு செய்ததில், அதிக வெப்ப அபாயத்தை எதிர்கொள்ளும் நகரங்களின் பட்டியலில் மதுரை உலக அளவில் 7வது இடத்தை பிடித்துள்ளது.
தென் தமிழகத்தின் முக்கிய மையமாக விளங்கும் மதுரை மாநகரில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்த வெப்பநிலை உயர்வு, பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையை பெரிதும் பாதித்து வருகிறது. நகரமயமாக்கல், புதிய கட்டிடங்களின் வருகை, வைகை ஆற்றின் கரைகள் மற்றும் நகரை சுற்றியுள்ள முக்கிய சாலைகளின் விரிவாக்கம் போன்ற பல்வேறு வளர்ச்சி பணிகளுக்காக பழமையான பெரிய பெரிய மரங்கள் அதிக அளவில் அகற்றப்பட்டுள்ளன. இதனால் மதுரையின் பசுமை பரப்பு குறைந்து வெப்ப தீவு எனப்படும் பாதிப்பு உருவாகியுள்ளது என்று குறிப்பிட்டிருந்தது.
இந்தநிலையில், மதுரை மானகிரி பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் செல்வகுமார் என்பவர், இதுதொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், “மதுரையின் பசுமைப் பரப்பை அதிகரிக்க “பசுமை மதுரை செயல்திட்டம்” என்ற ஒருங்கிணைந்த திட்டத்தை உருவாக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் தலைமையில் பல்துறை அதிகாரிகளைக் கொண்ட பிரத்யேக பசுமைக் குழுவை அமைக்க வேண்டும். வைகை ஆற்றின் 2 பக்க கரைகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி, அங்கு பூர்வீக மரக்கன்றுகளை நட்டு பசுமைப் பூங்காக்களை உருவாக்க வேண்டும்.
உத்தங்குடி முதல் கப்பலூர் வரையிலான ரிங் ரோடு, கப்பலூர் முதல் வாடிப்பட்டி மற்றும் வாடிப்பட்டி முதல் சிட்டம்பட்டி வரையிலான 4 வழிச்சாலைகள், மாவட்டத்தின் பிற முக்கிய நெடுஞ்சாலைகளின் இருபுறங்களிலும் மரக்கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டும். வெப்ப அலையைத் தடுப்பதற்கான சிறப்புச் செயல்திட்டத்தை வகுப்பதுடன், இந்த பசுமை மீட்புப் பணிகளை உயர்நீதிமன்றமே நேரடியாகக் கண்காணிக்க வேண்டும்” என்று தன்னுடைய மனுவில் கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன் மற்றும் ஆர்.சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வு, தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை, காலநிலை மாற்றத்துறை, நீர்வளத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை ஆகிய முக்கிய அரசுத் துறைகளின் முதன்மை செயலாளர்கள் இதுகுறித்து விரிவான பதில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த வழக்கு விசாரணையை வரும் செப்டம்பர் மாதம் 8ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

சபாநாயகர் ஓம் பிர்லா வழங்கிய தேநீர் விருந்தில் கனிமொழி எம்.பி. பங்கேற்பு; அரசியலில் புதிய பரபரப்பு
புதுடெல்லி,நாடாளுமன்றத்தில் சபாநாயகர் ஓம் பிர்லா வழங்கிய தேநீர் விருந்தில் திமுக சார்பில் கனிமொழி






