ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் தெரிவித்துள்ள அறிக்கையில், ‘கழகப் பொதுச் செயலாளர் என்ற அடிப்படை உறுப்பினர்களால் தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற எம்.ஜி.ஆர் வகுத்த அடிப்படை விதிக்கு முற்றிலும் முரணாக, கழக உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப் பெற்ற ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தை அப்பதவியிலிருந்து இயற்கை நியதிக்கு புறம்பாக நீக்கியும், கழகத்தின் நிரந்தரப் பொதுச் செயலா மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் தான் என்ற விதியை மாற்றியும், அடிப்படை உறுப்பினர்கள் யார் வேண்டுமானாலும் பொதுச் செயலாளராக வர முடியும் என்கின்ற அடிப்படை விதியை மாற்றி 10 மாவட்டக் கழகச் செயலாளர்கள் முன்மொழி வேண்டும் என தெரிவித்திருந்தார். 10 மாவட்டக் கழகச் செயலாளர்கள் வழி மொழிய வேண்டும், ஐந்து ஆண்டுகள் தலைமைக் கழக நிர்வாகியாக பணியாற்றி இருக்க வேண்டும் என்னும் நிபந்தனைகள் விதித்து அடிப்படை தொண்டர்களின் உரிமையை பறித்தும், கழக சட்டதிட்ட விதிகளின் அடிப்படைக்கு நேர் விரோதமாக செயல்பட்டும் வந்த உறுப்பினர்களைக் கொண்ட தற்போதைய போலி பொதுக்குழு அறவே கலைக்கப்பட்ட வேண்டும். கழக உறுப்பினர்கள் மூலம் உண்மையான தேர்ந்தெடுக்கப் பெற்ற உறுப்பினர்களைக் கொண்ட பொதுக்குழு அமைக்கப்பட வேண்டு என ஏப்ரல் 24-ம் தேதி திருச்சியில் நடைபெற்ற கழக அடிப்படை உறுப்பினர்கள் மாநாடு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு பரிந்துரை செய்துள்ளது.
அடிப்படை உறுப்பினர்களின் பரிந்துரையை ஏற்று, கழக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் நியமனம் செய்யப்பட்ட போலிப் பொதுக்குழுவானது இன்று முதல் கலைக்கப்படுகிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். கழக உறுப்பினர்கள் யாரும் அந்த போலி பொதுக்குழு உறுப்பினர்களோடு தொடர்பு கொள்ளக் கூடாது என்றும் கேட்டுக் கொள்கிறேன். அதுமட்டும் அல்லாது புதிய பொதுக் குழு தேர்ந்தெடுக்கப்படும் வகையில், உண்மையான கழக உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகள் விரைவில் வழங்கப்படும். அதன்பிறகு, முறையான தேர்தல்கள் மூலம் பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.







