திருநெல்வேலி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலர் க.ஸ்ரீராம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிதாவது.
திருநெல்வேலி மாவட்டம் புளியங்குடி வட்டம், நடுகருப்பழக தெருவைச் சேர்ந்த மாடசாமி மகன் தங்கசாமி வயது 26, கட்டிடத் வேலை செய்து வந்தார்.
இவரை புளியங்குடி காவல்துறையினர் கடந்த 11-ம் தேதி இவரை ஒரு வழக்கு சம்மந்தமாக கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்துள்ளனர். அவர் சிறையில் மயங்கி கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். தங்கசாமி மீது இதற்கு முன் எவ்வித வழக்கும் இல்லாத நிலையில், அவரை விசாரணை என்ற பெயரில் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளதும், மேலும் அவரை கைது செய்த தகவலை, சிறையிலடைத்த விவரங்களை அவரது குடும்பத்தாருக்கு தெரிவிக்கவில்லை.
அவர் சிறையில் இறந்த பிறகுதான் அவர் கைது செய்யப்பட்ட விவரமே குடும்பத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீஸாரின் இந்த நடவடிக்கை பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. கடந்த 15-ம் தேதி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பிணவறைக்கு வந்து பார்த்தபோது தங்கசாமியின் உடம்பில் காயங்கள் இருந்தன.
அதை உறவினர்கள் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்துள்ளார்கள். அப்படி வீடியோ எடுத்தவர்களுடைய செல்போனை பறித்து, மிரட்டிய காவல்துறை அதிகாரி வீடியோவை அழித்துள்ளார். இவ்வாறான மரணங்கள் குறித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் முந்தைய உத்தரவுகள் எதுவும் கடைபிடிக்கப்படவில்லை.
தங்கசாமியின் குடும்பத்தினருக்கு மருத்துவமனையில் உடற்கூராய்வு அறிக்கை மட்டும்தான் கடந்த 16-ம் தேதி தரப்பட்டுள்ளது. வீடியோ பதிவு தரப்படவில்லை. அதை ஏற்கெனவே நீதித்துறை நடுவர் (எண் -1) சார்பாக போலீஸார் வாங்கி சென்று விட்டதாகத் தெரிவிக்கிறார்கள். ஆனால் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் கேட்டபோது அங்கு வீடியோ வந்து சேரவில்லை என்கிறார்கள்.
இதுவும் பலத்த சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. தங்கசாமியின் இறப்பு குறித்து உயர்மட்ட விசாரணை நடத்த வலியுறுத்தி பெற்றோர்களும், உறவினர்களும் உடலை வாங்க மறுத்து தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். எனவே, இந்த மரணம் குறித்து பதவியில் உள்ள உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் உயர்மட்ட நீதி விசராணைக்கு உத்தரவிட வேண்டும்.
குற்றமிழைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்த தங்கசாமியின் குடும்பத்துக்கு ரூ. 25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.







