அமைச்சர் செந்தில் பாலாஜியை சட்டவிரோதமாக கைது செய்யவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை பதில் மனுவில் குறிப்பிட்டுள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா, சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் மனு ஒன்றை தாக்கல் செய்தார் , அமைச்சர் செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவலில் வைத்தது சட்டவிரோதமானது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் அவரை நீதிமன்ற காவலில் வைக்க மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யவேண்டும் என கோரிக்கை வைத்தார். இதற்கு பதில் மனு தாக்கல் செய்த அமலாக்கத்துறை, ஜூன் 13ஆம் தேதி நடந்த சோதனையில் அமைச்சர் செந்தில் பாலாஜி உடன் இருந்ததாகவும், அவரை சட்டவிரோதமாக கைது செய்யவில்லை எனறும் கூறினார். மேலும் கைது நடவடிக்கைக்கான சம்மனை பெற மறுத்த அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கதுறை அதிகாரிகளை மிரட்டும் வகையில் செயல்பட்டதாகவும் விசாரணைக்கு ஒத்துழைக்காததால் வேறு வழியின்றி அவர் கைது செய்யப்பட்டதாகவும் அமலாக்கத்துறை தனது பதில் மனுவில் கூறியிருந்தனர்.
இதுகுறித்து அமைச்சர் செந்தில் பாலாஜியின் குடும்பத்தினருக்கு குறுஞ்செய்தி, மின்னஞ்சல் மூலம் தகவல் அளிக்கபட்டதாகவும், சாட்சிகளை கலைத்து ஆதாரங்களை அழிக்க வாய்ப்பு இருப்பதால் தான் அவர் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது. மேலும் சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக எந்த விளக்கமும் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் அளிக்கப்படவில்லை எனவும், அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால் இதுவரை காவலில் எடுத்து விசாரிக்கவில்லை என அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் விளக்கம் கொடுத்துள்ளார்கள்.






