சென்னை: 12ம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. இந்த வருடம் 87.33% சதவிகிதம் பேர் இந்த தேர்வில் பாஸாகி உள்ளனர்.
தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட 5.38% குறைந்துள்ளது. இந்த முறை சிபிஎஸ்இ தேர்வில், திருவனந்தபுரம் மண்டலம் 99.91 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது. நாடு முழுக்க கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 92.71 சதவீதமாக இருந்தது.
இந்த முறை, மாணவர்களின் மதிப்பெண்களின் அடிப்படையில் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் வகுப்பை வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய சிபிஎஸ்இ வாரியம் முடிவு செய்துள்ளது. அதனால் அந்த லிஸ்ட் தனியாக வெளியிடப்படவில்லை. மண்டல அளவில் எந்த மண்டலம் சிறப்பாக செயல்பட்டு உள்ளது என்று மட்டும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த முறை மாணவர்களிடையே ஆரோக்கியமற்ற போட்டியைத் தவிர்க்க சிபிஎஸ்இ எந்த ரேங்க் பட்டியலையும் அறிவிக்காது. இருப்பினும், சிபிஎஸ்இ வாரியம் பல்வேறு பாடங்களில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 0.1 சதவீத மாணவர்களுக்கு மட்டும் மெரிட் தகுதிச் சான்றிதழை தனியாக வழங்கும். ஆனால் இது பொதுவில் வழங்கப்படாது. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் , 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் சுமார் 17 லட்சம் பேர் எழுதினர். இந்த நிலையில் கடந்த ஆண்டை விட ரிசல்ட் சதவீதம் சற்று குறைந்து உள்ளது. இந்த முறையம் மாணவர்களை விட மாணவிகள் தேர்வில் மீண்டும் மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். 90% க்கும் அதிகமான தேர்ச்சி சதவீதம் மாணவிகளால் பதிவு செய்யப்பட்டுள்ளது.
5 பாடங்களில் ஏதேனும் ஒரு பாடத்தில் மாணவ, மாணவியர் 33%க்கும் குறைவான மதிப்பெண்கள் பெற்றால் அவர்கள் ஜூலை மாதம் நடத்தப்படும் கம்பார்ட்மென்ட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று சிபிஎஸ்இ தேர்வுக் கட்டுப்பாட்டாளர் சன்யம் பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் தேர்வு முடிவுகளை results.cbse.nic.in மற்றும் cbseresults.nic.in இல் காண முடியும். அதேபோல் தேர்வு முடிவுகள் DigiLocker மற்றும் UMANG போன் செயலிகள் வழியாக டவுன்லோட் செய்து கொள்ள முடியும். இது போக சிபிஎஸ்இ குழு இந்த தேர்வு முடிவுகளை IVRS மற்றும் SMS மூலமாகவும் மாணவர்களுக்கு அனுப்பும்







