புதுடெல்லி:
காவிரியில் தினமும் 1 டிஎம்சி வீதம் 15 நாட்களுக்கு நீர் திறக்க காவிரி ஒழுங்காற்றுக்குழு பரிந்துரை செய்துள்ளது.
கடந்த ஜூன் மாதம் 15-ந்தேதி நடந்த காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டத்தில், தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கவே முடியாது என கர்நாடகம் மறுத்தது. இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆணைய கூட்டம், அதன்பிறகு நடந்த ஒழுங்காற்றுக்குழு கூட்டம் ஆகியவற்றிலும் இதனையே கூறியது.
பின்னர் நடைபெற்ற ஆணைய கூட்டத்தில் ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தார், ஒழுங்காற்றுக்குழு பரிந்துரைத்த 4.5 டி.எம்.சி. தண்ணீரை தமிழ்நாட்டுக்கு வழங்கியே ஆக வேண்டும் என உத்தரவிட்டார். ஆனால் இதுவும் முறையாக பின்பற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டு நிலவி வருகிறது.
இந்த சூழலில் காவிரி ஒழுங்காற்றுக்குழு இன்று (செவ்வாய்க்கிழமை) கூடியது. இந்த கூட்டத்தில் நீரியல் புள்ளி விவரங்களை ஒழுங்காற்றுக்குழு சேகரித்து, உரிய பரிந்துரைகளை கர்நாடகத்துக்கு அளிக்கும் என தகவல் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் காவிரியில் இருந்து தினமும் 1 டிஎம்சி வீதம் 15 நாட்களுக்கு நீர் திறக்க காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்டு மாதம் தமிழ்நாட்டிற்கு திறக்க வேண்டிய 45 டிஎம்சி நீரை திறந்து விட தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்துள்ளது. மேலும் ஏற்கனவே கர்நாடகா நிலுவையில் வைத்துள்ள 33 டிஎம்சி நீரையும் திறக்க தமிழ்நாடு அரசு வலியுறுத்தி உள்ளது. ஆகஸ்டு 12ம் தேதி காலை 8 மணி முதல் 15 நாட்களுக்கு, பிலிகுண்டுலுவில் 12,000 கன அடி நீர் வருவதை உறுதி செய்ய வேண்டும் என்று காவிரி ஒழுங்காற்றுக் குழு தெரிவித்துள்ளது.
ஏற்கனவே பரிந்துரை செய்யப்பட்ட 3,500 கன அடி நீர் திறக்கப்படாத நிலையில் மீண்டும் தண்ணீர் திறக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

போதைபொருள் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்: சென்னை ஆட்சியர் தொடங்கி வைத்தார்
சென்னை:சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் எஸ்.மாலதி ஹெலன் இன்று (11.8.2026) சென்னை மத்திய






