திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கள்ளக்கிணறு குறை தோட்டம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 47). பருத்திக்கொட்டை வியாபாரம் செய்து வந்தார். இவருடைய சித்தப்பா மகன் மோகன்ராஜ் (45). இவர்கள் கள்ளக்கிணறு பகுதியில் அடுத்தடுத்து உள்ள வீடுகளில் வசித்து வந்தனர். நேற்று இரவு 7 மணிக்கு வீட்டில் செந்தில்குமார் தனியாக இருந்தார். அப்போது திடீரென 3 பேர் அரிவாள், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் வந்தனர். அவர்கள் திடீரென்று செந்தில்குமாரை சரமாரியாக வெட்டினர். அவருடைய சத்தம் கேட்டு மோகன்ராஜ் அங்கு ஓடிவந்தார். செந்தில்குமாரை காப்பாற்ற முயன்றார்.
ஆனால் அதற்குள் அந்த நபர்கள் செந்தில்குமாரை வெட்டி வீழ்த்தினர். கொலையை தடுக்க முயன்ற மோகன்ராஜையும் கொடூரமாக வெட்டினர். மோகன்ராஜின் அலறல் சத்தம் கேட்டு அவருடைய தாயார் புஷ்பவதி, புஷ்பவதியின் அக்காள் ரத்தினாம்பாள் ஆகியோரும் அங்கு வந்தனர். பெண்கள் என்றும் பாராமல் அவர்களையும் வெட்டினர். இதனால் அவர்களும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். பின்னர் 3 பேரும் தப்பி சென்றுவிட்டனர்.
இந்த கொடூர கொலை குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதன் மற்றும் பல்லடம் போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து வந்தனர். அங்கு கொலையாகி கிடந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்ல முயன்றனர். ஆனால் கொலையானவர்களின் உறவினர்கள் கொலை செய்யப்பட்டவர்களின் உடல்களை எடுக்க விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொலையாளிகளை கைது செய்த பிறகுதான் உடல்களை எடுக்க அனுமதிப்போம் என்று தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கொலையாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், இந்தக் கொலை சம்பவத்தில் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான செல்லமுத்து என்பவர் திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்தவர் என முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. திருப்பூர் மாவட்டம் குண்டம் பகுதியில் நேற்று இரவு செல்லமுத்து கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த கொடூர கொலை சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
செந்தில்குமார் பருத்திக்கொட்டை வியாபாரம் செய்து வந்ததால் சரக்கு வேன் ஒன்றை வைத்திருந்தார். அந்த சரக்கு வேனுக்கு டிரைவராக ஒருவர் வேலை செய்துள்ளார். அந்த டிரைவரின் நடவடிக்கைகள் சரியில்லாததால் அவரை வேலையை விட்டு செந்தில்குமார் நிறுத்தினார். ஆனால் அந்த டிரைவர் வேலையை விட்டு நின்ற பிறகும் செந்தில்குமார் வீட்டிற்கு வரும் வழிப்பாதையில் அமர்ந்து மதுகுடிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். அப்போது செந்தில்குமார் அவரை எச்சரித்து வேறு பகுதிக்கு சென்று மது அருந்துமாறு பலமுறை கூறியுள்ளார்.
இந்த நிலையில் அந்த டிரைவரும், அவருடைய நண்பர்கள் 2 பேரும் நேற்று இரவு செந்தில்குமாரின் வீட்டிற்கு செல்லும் வழிப்பாதையில் அமர்ந்து மதுகுடித்து உள்ளனர். இதை பார்த்த செந்தில்குமார் அவர்களை எச்சரிக்கை செய்து அங்கிருந்து போகுமாறு கூறினார். ஆனால் அவர்கள் அங்கிருந்து போகாமல் செந்தில்குமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றவே அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் செந்தில்குமாரை வெட்டியுள்ளனர். இவருடைய அலறல் சத்தம் கேட்டு காப்பாற்ற வந்த மோகன்ராஜ், மோகன்ராஜின் தாயார் புஷ்பவதி மற்றும் ரத்தினாம்மாள் ஆகியோரையும் கொலை செய்து விட்டு அவர்கள் 3 பேரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்தநிலையில்தான் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.







