புதுடெல்லி:
மீன் நோய்கள் பற்றி விரைவாகவும், எளிதாகவும் புகாரளிக்க பிரதமரின் சம்பதா திட்டத்தின் கீழ் மொபைல் செயலி ஒன்றை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.
மத்திய அரசின் மீன்வளத்துறை நாட்டில் உள்ள சுமார் 3 கோடி மீனவர்கள் மற்றும் மீன் விவசாயிகளுக்கு வாழ்வாதாரத்தையும் வேலை வாய்ப்பையும் வழங்குகிறது. இத்துறையின் வளர்ச்சிக்கான அபரிமிதமான சாத்தியக்கூறுகளை முன்னறிவித்து, நீலப் புரட்சியைக் கொண்டு வருவதற்காக, மத்திய அரசு, ரூ 20 ஆயிரத்து 50 கோடி முதலீட்டுடன் பிரதமரின் மத்ஸய சம்பதா திட்டம் என்ற முதன்மைத் திட்டத்தை அறிவித்துள்ளது.
நீர்வாழ் உயிரினங்களுக்கு ஏற்படும் நோய்களால் மீனவர்கள் பெரும் பொருளாதார இழப்புகளை சந்திக்கின்றனர். எனவே மீன் நோயை ஆரம்பகாலத்தில் கண்டறிந்து கட்டுப்படுத்துவதற்கு முக்கியமானதாக‘‘ கருதப்படுகிறது. நோய் கண்காணிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து, ஐதராபாத்தில் உள்ள தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம் மூலம் கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை அமைச்சகம், மீன்பிடிதொழில் மற்றும் மீனவர்கள் நலனை கருதி நீர்வாழ் உயிரினங்களுக்கு ஏற்படும் நோய்களை கண்டறிந்து தீர்வு காண்பதற்காக ஒரு லட்சிய தேசிய கண்காணிப்புத் திட்டம் மீன் வளர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்த 14 மாநிலங்களில் தொடங்கப்பட்டது.
கடந்த பிப்ரவரி 27ம் தேதி சென்னையில் மத்திய அரசின் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலாவால் இந்தத் திட்டம் வெற்றிகரமாக தொடங்கப்பட்டது.மீனவர்களை மேலும் வலுப்படுத்தும் திட்டத்தின் கீழ், “மீன் நோயைப் புகாரளி” என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்தச் செயலி கடந்த ஜூன் மாதம் 28ம் தேதி மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா தொடங்கி வைத்தார்.
புதுமையான இந்த செயலியைப் பயன்படுத்தி, மீனவர்கள் தங்கள் பண்ணைகளில் உள்ள மீன், இறால் மற்றும் மொல்லஸ்க்களில் ஏற்படும் நோய்களைக் கள மட்ட அலுவலர்கள் மற்றும் மீன் சுகாதார நிபுணர்களிடம் தெரிவிக்கலாம். தங்கள் பண்ணைகளில் ஏற்படும் நோய் பிரச்சனையை விரைவாகத் தீர்க்க அறிவியல் ஆலோசனைகளை பெறலாம். மீன் விவசாயிகள், கள அளவிலான அதிகாரிகள் மற்றும் மீன் சுகாதார நிபுணர்களை இணைக்கும் மைய தளமாக இந்த செயலி இருக்கும்.







