ஒரு காலத்தில் பொதுத்துறை நிறுவனங்கள் இந்தியாவின் பெருமையாக இருந்தது. இளைஞர்கள் பொதுத்துறை நிறுவனங்களில் பணி புரிவதை தங்களது கனவாக கொண்டு இருந்தனர். ஆனால் இன்று பொதுத்துறை நிறுவனங்கள் தங்களது முக்கியத்துவத்தை இழந்துள்ளன. பொதுத்துறை நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் குறைந்துவிட்டன. கடந்த 2014-ம் அண்டு 16.9 லட்சமாக இருந்த பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் எண்ணிக்கை 2022-ம் ஆண்டில் 14.6 லட்சமாக குறைந்தள்ளது.
வளர்ச்சியை நோக்கி செல்லும் நாட்டில் இது போன்ற வேலை வாய்ப்புகள் குறையுமா? பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் 1,81,127 பேர் வேலை இழந்துள்ளனர். செய்ல்-61,920, எம்.டி.என்.எல். 34,997, எஸ்.இ.சி.எல். 29,140, இந்திய உணவு கழகம் 28,663, ஒ.என்.ஜி.சி.யில் 21,120 பேர் வேலையை இழந்துள்ளனர். ஆண்டுதோறும் 2 கோடி வேலை வாய்ப்பு என்று பொய் வாக்குறுதி அளித்தவர்கள் வேலைகளை அதிகரிப்பதற்கு பதிலாக 2 லட்சத்துக்கும் அதிகமான வேலை வாய்ப்புகளை நீக்கியுள்ளது. இதன் மூலம் இளைஞர்களின் நம்பிக்கை தகர்ந்துள்ளது. இந்த நிறுவனங்களில் ஒப்பந்த பணிகளில் ஆட்களை சேர்ப்பது இரு மடங்காக அதிகரித்துள்ளது. இந்நிறுவனங்களை தனியார் மயமாக்கும் சதியா? இந்த அரசு தங்களது சில பணக்கார நண்பர்களின் பயனுக்காக மட்டுமே செயல்படுகிறது. இந்த அரசாங்கத்தின் கீழ் நாடு வரலாறு காணாத வேலையில்லா திண்டாட்டத்தில் சிக்கி தவிக்கிறது. பொதுத்துறை நிறுவனங்கள் நாட்டு மக்களின் சொத்து. அவை இந்தியாவின் முன்னேற்றப் பாதையை வலுப்படுத்தும் வகையில் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று ராகுல் காந்தி கூறினார்.






