சென்னை:
நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகார் தொடர்பாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று சென்னை வளசரவாக்கம் காவல்நிலையத்தில் ஆஜராகும் நிலையில் போலீசார் குவிக்கப்பட்டிருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி பாலியல் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் விஜயலட்சுமியிடம் போலீசார் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்தனர். 8 முறை தான் கருக்கலைப்பு செய்ததாக விஜயலட்சுமி கூறியதை தொடர்ந்து அவருக்கு மருத்துவ பரிசோதனையும் நடத்தப்பட்டது.
இதனையடுத்து சீமானை விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டு சென்னை வளசரவாக்கம் போலீசார் சம்மன்கள் அனுப்பினர். ஆனால் சீமான், 2011-ல் முடித்து வைக்கப்பட்ட புகாரை ஏன் மீண்டும் விசாரிக்க வேண்டும்? புதியதாக நீதிமன்ற ஒப்புதல் கடிதம் தந்துள்ளதா? என கேட்டிருந்தார்.
இதனிடையே திடீரென சீமான் மீதான புகாரை நடிகை விஜயலட்சுமி வாபஸ் பெற்றுக் கொண்டு பெங்களூரு சென்றுவிட்டார். சீமான் தமக்கு பணம் தரவில்லை; ஆனால் போலீஸ் நடவடிக்கை மந்தமாக இருக்கிறது. சீமானை என்னால் எதிர்க்க முடியாமல் தோல்வி அடைந்துவிட்டேன் என நடிகை விஜயலட்சுமி கூறியிருந்தார்.
இந்நிலையில் சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் விஜயலட்சுமி விவகாரம் தொடர்பாக சீமான் இன்று விசாரணைக்கு ஆஜராக இருக்கிறார். இதற்காக வளசரவாக்கம் காவல் நிலையப் பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருக்கின்றனர். அப்பகுதியில் நாம் தமிழர் கட்சியினரும் பெருமளவில் திரண்டுள்ளனர். ஆனால் சீமானுடன் 5 வழக்கறிஞர்கள் மட்டுமே காவல்நிலையத்துக்குள் செல்ல அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் வளசரவாக்கம் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.







