சென்னை:
“தன்வந்திரி கடவுள் ஓர் கற்பனையாகும். அதனை தேசிய மருத்துவ ஆணைய லோகோவில் திணிப்பது என்? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து டாக்டர்.அன்புமணி ராமதாஸ் இன்று தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவில் மருத்துவக் கல்வியை ஒழுங்குபடுத்தும் அமைப்பான தேசிய மருத்துவ ஆணையத்தின் இலட்சினையில் தன்வந்திரி எனப்படும் கடவுளின் உருவப்படம் திணிக்கப்பட்டிருப்பதும், இந்தியா என்ற பெயருக்கு மாற்றாக பாரத் என்ற பெயர் பொறிக்கப்பட்டிருப்பதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தேவையற்ற செயலாகும். மருத்துவம் என்பது உயிர் காக்கும் தொழில். உயிரியலும், தொழில்நுட்பமும் தான் மருத்துவத்துக்கான அடிப்படை ஆதாரமாகும்.
மருத்துவக் கல்லூரிகளில் பேராசிரியர்களை நியமிக்காமல் தன்வந்திரியின் உருவப்படத்தை வைத்து அவரே மானசீகமாக மாணவர்களுக்கு மருத்துவப் பாடம் நடத்துவார் என்று கல்லூரி நிர்வாகங்கள் தரப்பில் கூறப்பட்டால், அதை மருத்துவ ஆணையம் ஏற்றுக் கொள்ளுமா? மருத்துவ ஆணையத்தின் இலட்சினையில் தன்வந்திரியின் படம் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பே சேர்க்கப்பட்டு விட்டதாகவும், கறுப்பு – வெள்ளையில் இருந்த படத்திற்கு இப்போது வண்ணம் மட்டுமே சேர்க்கப்பட்டிருப்பதாகவும் மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ள விளக்கத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.
மருத்துவக் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்பு தொடக்க நிகழ்ச்சியின் போது ஹிப்போகிரட்டிக் உறுதிமொழிக்கு மாற்றாக மகரிஷி சரகர் உறுதிமொழியை ஏற்றுக்கொள்ளலாம் என்று கடந்த ஆண்டு மருத்துவ ஆணையம் பரிந்துரைத்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இப்போது தன்வந்திரி படத்தை திணித்து அடுத்த சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. மருத்துவத்துறை வளர்ந்து விட்ட நிலையில், அதை மேலும் வலுப்படுத்த மருத்துவக் கல்வி ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு மாறாக, புராணங்களின் அடிப்படையில் மத அடையாளத்தை திணிக்க கூடாது. தேவையின்றி ஏற்படுத்தப்பட்ட சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என டாக்டர்.அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.






