நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் பற்றிய பிரச்சனைகள் குறித்து விவாதிப்பதற்காக, பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தலைமையில், அரசியல் கட்சிகளின் தலைவர்களுடனான கூட்டம் இன்று (19. 07. 2026) புது தில்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு கூட்டிய இந்தக்கூட்டத்தில், மத்திய சுகாதாரம், குடும்ப நலத்துறை, ரசாயனங்கள் மற்றும் உரங்கள் துறை அமைச்சர் திரு ஜெகத் பிரகாஷ் நட்டா, சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப் பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் திரு அர்ஜுன் ராம் மெக்வால், நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் தகவல், ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் ஆகியோரும் கலந்துகொண்டனர். இதில் அமைச்சர்கள் உட்பட 40 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 58 தலைவர்கள் கலந்துகொண்டனர்.
இந்தக்கூட்டத்தின் தொடக்கத்தில், பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் அறிமுகவுரை ஆற்றி, அனைத்துத் தலைவர்களையும் வரவேற்றார். அதனைத் தொடர்ந்து, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கூட்டத்தை நடத்தினார். நாடாளுமன்றத்தின் 2026-ம் ஆண்டுக்கான மழைக்காலக் கூட்டத்தொடர், 2026 ஜூலை 20-ம் தேதி திங்கட்கிழமை அன்று தொடங்கும் என்றும், அரசுப் பணிகளின் அவசரத் தேவைகளைப் பொறுத்து, இக்கூட்டத்தொடர் 2026 ஆகஸ்ட் 13ஆம் தேதி வியாழக்கிழமை அன்று முடிவடையக்கூடும் என்றும் அவர் தலைவர்களுக்குத் தெரிவித்தார். இக்கூட்டத்தொடரின், 25 நாட்களில் மொத்தம் 19 அமர்வுகள் நடைபெறும்.






