அனைத்து ஆவணங்களும் தன்னிடம் இருந்த போதிலும் ஏன் 500 ரூபாய் அபராதம் விதிக்கிறீர்கள் என்று போக்குவரத்து போலீசாரிடம் வாக்குவாதம் செய்த வாகன ஓட்டுனர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை கொளத்தூர் செந்தில் நகர் சிக்னல் அருகே கடந்த 6 ஆம் தேதி போக்குவரத்து தலைமைக் காவலர் ராமச்சந்திரன் மற்றும் காவலர் வாசுதேவன் ஆகியோர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சிறிய சரக்கு வாகனம் ஒன்று பள்ளி பாடப்புத்தகங்களை ஏற்றிக்கொண்டு வந்தது. அந்த சரக்கு வாகனத்தை மறித்த டிராபிக் போலீசார் விதிமீறலில் ஈடுபட்டதாக கூறி 500 ரூபாய் அபராதம் விதிக்க முயன்றனர்.
ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சரக்கு வாகனத்தின் டிரைவர் எந்த காரணத்திற்காக 500 ரூபாய் அபராதம் விதிக்கிறீர்கள் என்று கேட்டு போலீசிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். மேலும் டிராபிக் போலீஸ் அணிந்த சீருடையில் அவருடைய பெயர் பேட்ஜ் இல்லை. இதனால், நீங்கள் போலீஸ்தானா.. உங்களின் ஆவணத்தை காட்டுங்கள் என்று ஓட்டுநர் போக்குவரத்து போலீசிடம் கேட்டார். தன்னிடம் அனைத்து ஆவணங்களும் சரியாக இருக்கிறது பிறகு எதற்கு அபராதம் விதிக்கிறீர்கள். வேலிட் லைசன்ஸ் இருக்கு. வேலிட் புக் இன்சுரன்ஸ் இருக்கு.. எல்லா ஆவணங்களும் சரியாக இருக்கு.. அப்புறமும் அப்ஸ்ட்ரகஷன் என்று அபராதம் போடுகிறீர்கள். உங்களுக்கு எதிராக ஐஜி அலுவலகத்தில் புகாரளிப்பேன் என வாக்கு வாதம் செய்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானது.
இந்த நிலையில், போலீசாரிடம் வாக்கு வாதம் செய்த டிரைவர் செந்தமிழன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆவணங்களை காட்டாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டு போலீசாரை பணி செய்ய விடாமல் இடையூறு செய்ததாக ராஜமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் டிரைவர் செந்தமிழன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சிறப்பு கவல் உதவி ஆய்வாளர் அளித்த புகாரின் பேரில் ஓட்டுநர் செந்தமிழன் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. காவலரை பணி செய்ய விடாமல் தடுத்தல், மிரட்டல், ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார், டிரைவர் செந்தமிழனை நேரில் அழைத்து விசாரணை நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
தன் மீது தவறு இல்லாத போது எதற்கு அபராதம் செலுத்தவேண்டும் என கேள்வி கேட்டு உரிமைக்குரல் எழுப்பிய வாகன ஓட்டுனரின் மீது 3 பிரிவுகளில் காவல்துறை வழக்கு பதிவு செய்திருப்பது அப்பட்டமான அதிகாரதுஷ்பிரயோகம்..தவறுகளை சுட்டி காட்டினாலோ அல்லது தவறுகளுக்கு எதிராக குரல் கொடுத்தாலோ அவர்களை முடக்க என்னும் போக்கு அபாயகரமானது.
One Response
சட்டம் தன் கடமையை சரியாக செய்கிறது.