திருப்பூர்:
திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களில் வடமாநில தொழிலாளர்கள் அதிக அளவில் தங்கி பணியாற்றி வருகிறார்கள். சமீபகாலமாக திருப்பூரில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவி வருகிறது.
இவ்விவகாரம் பீகார் மாநில சட்டசபையில் நேற்று இவ்விவகாரம் எதிரொலித்தது. தமிழகத்துக்கு அனைத்து கட்சி குழுவை அனுப்ப வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் விடுத்த கோரிக்கையை அம்மாநில முதல்வர் நிதிஷ் குமாரும் ஏற்றுக்கொண்டார். இதனிடையே வடமாநில தொழிலாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. வடமாநில தொழிலாளர்கள் புரிந்து கொள்ளும் வகையில் இந்தியில் அறிவிப்புகளை தமிழக காவல்துறை தனது இணைய தளத்தில் வெளியிட்டு உள்ளது. வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக கூறப்படுவது வதந்தி, அதை நம்பவேண்டாம் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர். இதுதொடர்பான வீடியோக்களும் போலி என்று தமிழக போலீஸ் கூறியிருக்கிறது.
தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்களுக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என்று அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்துள்ளார். மேலும், வடமாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய திருப்பூர் மாவட்ட நிர்வாகம் தனி குழுவை அமைத்துள்ளது. இந்த குழு, திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்களில் நேரில் சென்று ஆய்வு செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், திருப்பூர், மற்றும் சென்னை ஆகிய பகுதிகளில் பணிபுரிந்துவரும் வடமாநில தொழிலாளர்கள் மொத்தமாக தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ரெயில் நிலையங்களில் குவிந்துள்ளனர். அவர்கள் அதிக அளவில் தமிழகத்தை விட்டு வெளியேறி வருவது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆனால் இதுபற்றி வடமாநில தொழிலாளர்கள் கூறுகையில், அடுத்த வாரம் ஹோலி பண்டிகை வருகிறது. இதனை கொண்டாடவே நாங்கள் எங்கள் சொந்த ஊர்களுக்கு செல்கிறோம். தமிழகத்தில் எங்களுக்கு எந்தவிதமான அச்சுறுத்தலும் கிடையாது என்று தெரிவித்தனர்.