சென்னை:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கனமழையால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், டிச.4 முதல் 7-ம் தேதி வரை மின்கட்டணம் செலுத்த வேண்டிய நுகர்வோருக்கு டிச.18-ம் தேதி வரை அபராதமின்றி மின்கட்டணம் செலுத்த காலநீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட ஒரு பகுதி மின் நுகர்வோரே இதனால் பயன்பெற முடியும்.
எனவே, 4 மாவட்டங்களில் உள்ள அனைத்து மின்நுகர்வோரும் பயன்பெறும் வகையில் அபராதமின்றி மின் கட்டணம் செலுத்த டிச.30 வரை அவகாசம் வழங்க வேண்டும் என கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார். மின்கட்டணம் செலுத்தும் கடைசி நாள் டிச.4 முதல் 7-ம் தேதி வரை உள்ள நுகர்வோருக்கு அபராதமின்றி செலுத்த வழங்கப்பட்ட கால அவகாசத்தை, வரும் 16-ம் தேதி வரை மின்கட்டணம் செலுத்த வேண்டியவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என நுகர்வோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, அவர்கள் கூறும்போது, 4 மாவட்டங்களில் அதிகன மழையால் பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை இன்னும் முழு அளவில் திரும்பவில்லை. பலர் வேலைக்குச் செல்ல முடியாமலும், சொந்த தொழிலை மேற்கொள்ள முடியாமலும் வருவாய் இன்றி மிகுந்த சிரமத்தில் உள்ளனர். எனவே, வரும் 16-ம் தேதி வரை மின்கட்டணம் செலுத்த வேண்டியவர்களுக்கும் வரும் 18-ம் தேதி வரை அபராதம் இன்றி செலுத்த கால அவகாசம் அளிக்க வேண்டும் என்றனர்.






