சென்னை:
தமிழக மீனவர்கள் 25 பேரை கைது செய்த சிங்களக் கடற்படையினரின் தொடர் அட்டூழியத்திற்கு முடிவு கட்ட வேண்டும் என பா.மா.க தலைவர் அன்புமணி ராமதாஸ் அரசை வலியுறுத்தியுள்ளார். நாகை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து வங்கக்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் மாவட்டங்களைச் சேர்ந்த 25 மீனவர்களை கைது செய்துள்ள இலங்கைக் கடற்படை அவர்களின் இரு படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். தனுஷ்கோடி அருகே இராமேஸ்வரம் மீனவர்களின் விசைப்படகு மீது தங்களின் படகை மோத செய்து சிங்களக் கடற்படை சேதப்படுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் சேதமடைந்த படகில் இருந்த 5 மீனவர்கள் எந்த வித காயமும் இன்றி உயிர் தப்பினர்.
தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் அவர்களை சிங்களக் கடற்படை கைது செய்து வருகிறார்கள். வங்கக்கடலில் பாரம்பரியமாக தமிழக மீனவர்கள் மீன்பிடித்து வரும் பகுதிகளில் தொடர்ந்து தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பது சட்டப்பூர்வ உரிமையாக்கப்பட வேண்டும். இது தொடர்பாக இலங்கை அரசுடன் ஒன்றிய அரசு பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என அன்புமணி ராமதாஸ் ஒன்றிய அரசை வலியுறுத்தியுள்ளார்.







