கொழும்பு:
கடலில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்கள் எல்லைதாண்டி மீன்பிடிப்பதாக கூறி அவர்களை கைது செய்வதும், படகுகளை சேதம் செய்வதும் இலங்கை கடற்படையினர் வழக்கமாக கொண்டுள்ளனர். இதேபோல், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி நாகை, மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படை கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறைபிடித்து சென்றது.
அவர்கள் சென்ற படகு பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், 12 பேரும் கைதுசெய்யப்பட்டனர். இதனால், அவர்களது உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். இந்த நிலையில், இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட நாகை மீனவர்கள் 12 பேர் விடுதலை செய்யப்பட்டு உள்ளனர்.
இலங்கை பருத்தித்துறை நீதிமன்றம் நிபந்தனைகளுடன் 12 பேரையும் விடுதலை செய்துள்ளது. விடுதலை செய்யப்பட்டுள்ள 12 மீனவர்களும் ஓரிரு நாட்களில் சொந்த ஊர் திரும்புவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.