பாராளுமன்ற பொதுத்தேர்தல் நேற்று நடைபெற்று முடிவடைந்ததைத் தொடர்ந்து, மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதிகளுக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் இருந்து வரப்பெற்ற மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சென்னை லயோலா கல்லூரியில் உள்ள பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைக்கும் பணி மாவட்ட தேர்தல் அலுவலர்/கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் மற்றும் தேர்தல் பொது பார்வையாளர் டாக்டர் டி. சுரேஷ்தேர்தல் நடத்தும் அலுவலர்/மத்திய வட்டார துணை ஆணையாளர் கே.ஜெ.பிரவீன் குமார், மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் இன்று நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து, லயோலா கல்லூரியில் உள்ள பாதுகாப்பு அறையினை கண்காணிப்புக் கேமராக்கள் மூலம் கண்காணிக்கும் நடவடிக்கைகளையும், காவல், தீயணைப்புத்துறை உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மாவட்ட தேர்தல் அலுவலர்/ கூடுதல் தலைமைச் செயலர்/ ஆணையாளர் இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் மாவட்ட தேர்தல் அலுவலர்/கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் அவர்கள் பேசும்போது தெரிவித்ததாவது :
நேற்று நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற பொதுத்தேர்தல் அமைதியான முறையிலும், சிறப்பாகவும் நடைபெற்றமைக்காக அனைத்து வாக்காளர்களுக்கும் எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் தேர்தலில் பெருநகர சென்னை மாநகராட்சி, வருவாய்த்துறை, மத்திய மற்றும் மாநில காவல்துறை, சென்னைப் பெருநகர காவல்துறை மற்றும் பிற துறைகள், தன்னார்வலர்கள் உட்பட 40,000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இரவு பகல் பாராமல் பணிபுரிந்தனர். இவர்களுக்கு எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்னை மாவட்டத்தில் 3 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் வடசென்னை நாடாளுமன்ற தொகுதிகளிலிருந்து வரப்பெற்ற மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இராணி மேரி கல்லூரி, மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதிகளிலிருந்து வரப்பெற்ற மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் லயோலா கல்லூரி, தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதிகளிலிருந்து வரப்பெற்ற மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அண்ணா பல்கலைக்கழகம் ஆகியவற்றில் உள்ள பாதுகாப்பு அறைகளில் பாதுகாப்பாக தேர்தல் பொது பார்வையாளர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் இன்று சீல் வைக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது.
சென்னையில் உள்ள 3 நாடாளுமன்றத் தொகுதிகளில் சட்டமன்றத் தொகுதிகள் வாரியாக சென்னை மாவட்டத்தில் 16 சட்டமன்றத் தொகுதிகள், வடசென்னையில் திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதி மற்றும் தென்சென்னையில் சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்த்து 18 சட்டமன்றத் தொகுதிகள் வரும்.
சென்னை மாவட்டத்தில் 16 சட்டமன்றத் தொகுதிகளில் 39.25 இலட்சம் வாக்காளர்கள் உள்ளனர். 18 சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்த்து 48.69 இலட்சம் வாக்காளர்கள் உள்ளனர். வடசென்னை நாடாளுமன்றத் தொகுதிகளில் 60.13% வாக்குப்பதிவு, தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதிகளில் 54.27% வாக்குப்பதிவு, மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதிகளில் 53.91% வாக்குப்பதி என மொத்தம் 56.10% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இந்த பாதுகாப்பு அறைகளில் 188 கண்காணிப்பு கேமராக்கள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. மேலும், நான்கு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு, 1,095 காவல் பணியாளர்கள் மூலம் 3 சுழற்சி முறைகளில் 24 மணி நேரமும், மாநகராட்சி பணியாளர்கள் 24 நபர்கள் 3 சுழற்சி முறைகளில் 24 மணிநேரமும் கண்காணிக்கும் வகைகளில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேபோன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் இராணி மேரி கல்லூரியிலும், அண்ணா பல்கலைக்கழகத்திலும் மேற்கொள்ளப்படுகிறது. இந்தப் பகுதிகள் முழுவதும் ஜூன் மாதம் 6ஆம் தேதி வரை இந்திய தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் தான் இருக்கும் எனத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, வடசென்னை நாடாளுமன்றத் தொகுதிகளுக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் இருந்து வரப்பெற்ற மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை இராணி மேரி கல்லூரியில் உள்ள பாதுகாப்பு அறையில் சீல் வைக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதை மாவட்ட தேர்தல் அலுவலர்/கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வின் போது, தேர்தல் பொது பார்வையாளர் திரு. கார்த்திகே தன்ஜி புத்தப்பாட்டி, இ.ஆ.ப., தேர்தல் நடத்தும் அலுவலர்/வடக்கு வட்டார துணை ஆணையாளர் திரு.கட்டா ரவி தேஜா, இ.ஆ.ப., மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
செய்தி வெளியீடு : இணை இயக்குநர் / மக்கள் தொடர்பு அலுவலர்,
பெருநகர சென்னை மாநகராட்சி







