சென்னை:
சென்னை அடையாறு ஆற்றில் தொடர் மழை மற்றும் நீர் திறப்பால் சைதாப்பேட்டை போன்ற தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புப் பகுதிகளை வெள்ளம் சூழ்வது வாடிக்கையான ஒன்று. நீர் வளத்துறை மற்றும் அரசு அதிகாரிகள் கரையோர ஆக்கிரமிப்புகளை ஆய்வு செய்து, மக்களைப் பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதும் வாடிக்கையாக உள்ளது.
இதற்கு சான்று கடந்த 2015ம் ஆண்டு மற்றும் 2023ம் ஆண்டு ஏற்பட்ட மிகப்பெரிய அளவிலான வெள்ளப்பெருக்கு. இந்தக் காலங்களில் அடையாறு ஆற்றில் வரலாறு காணாத அளவில் நீர் பெருக்கெடுத்து ஓடியது.

கடந்த 2015ம் ஆண்டு டிசம்பர் 1-ஆம் தேதி தமிழக அரசின் கவனக்குறைவால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து அதிகப்படியான நீர் திறந்துவிடப்பட்டது. இது அப்போதைய காலத்தில் சென்னையை துவம்சம் செயத்து. மக்களுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டது.
சாதாரணமாக மழைக்காலங்களில் அடையாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போதே சைதாப்பேட்டையில் கரையோர மக்கள் வெளியேற்றப்படுவது வழக்கம். செம்பரம்பாக்கம் ஏரி இறக்கப்பட்டபோது அவர்கள் பேரிழப்பை சந்தித்தனர்.
அப்போது செம்பரம்பாக்கம் ஏரியின் வான் கதவுகள் திடீரென திறக்கப்பட்டதால், அடையாறு ஆற்றில் அதன் கொள்ளளவை விட மிக அதிகமான நீர் பெருக்கெடுத்து ஓடியது. அடையாறன் ஆற்று நீர் நிரம்பி சைதாப்பேட்டை பாலத்தின் மீதும், கரையோரப் பகுதிகளிலும் பாய்ந்தது. சைதாப்பேட்டை, திடீர் நகர், கோட்டூர்புரம் மற்றும் ஜாபர்கான்பேட்டை உள்ளிட்ட பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.

இதேபோன்று கடந்த 2023ம் ஆண்டும் மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட கனமழையார்ல அடையாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சைதாப்பேட்டை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் மிகவும் பொருட்சேதங்களை அடைந்தனர். அவர்கள் மாற்று இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். இப்படி தொடர்ச்சியாக மிகவும் தாழ்வான பகுதியான சைதாப்பேட்டையில் வசிக்கும் மக்கள் மழைக்காலங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளுக்கு மழைப் பொழிவை அளிக்கக்கூடிய வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 15ம் தேதிக்கு மேல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு இன்னும் ஒன்றரை மாதங்களே உள்ளன. ஆனால் சைதாப்பேட்டை அடையாறு ஆற்றில் புதர்செடிகள் மண்டிக்கிடக்கின்றன.

இதற்கிடையே கடந்த 8ம் தேதி தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த், சைதாப்பேட்டை அடையாறு ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள திடீர் நகர் பகுதியை பார்வையிட்டார். வரவிருக்கும் வடகிழக்குப் பருவமழையின் போது வெள்ள நீர் தடையின்றி வெளியேறுவதை உறுதி செய்வதற்காக, அடையாறு ஆற்றின் இந்தப் பகுதியைச் சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் மண்டிக்கிடக்கும் புதர் செடிகள், ஆகாயத் தாமரைகளை அகற்றப்படும் என்றும் அவர் பொதுமக்களிடைய தெரிவித்தார்.
ஆனால் சைதாப்பேட்டை அடையாறு ஆற்றில் தண்ணீர் வெளியே தெரியாத அளவிற்கு ஆகாயத் தாமரையும், புதர்களும் மண்டிக்கிடக்கின்றன. இதுவரை இதனை சுத்தம் செய்ய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. வெறும் வாய்வழி உத்தரவிலேயே கிடப்பில் போடப்பட்டுள்ளது. தற்போது அடிக்கடி மழை செய்கிறது. குளோபல் வார்மிங் என்கிற காலநிலை மாற்றம் காரணமாக தொடர்ச்சியாக சென்னையில் மழை பெய்தால் சைதாப்பேட்டை மக்கள் மிகவும் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. எனவே கொடுத்த வாக்குறுதியை அமைச்சர் ஆனந்த் உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.







