பெருந்திரள் முறையீடு..
ஐயன் திருவள்ளுவருக்குக் குமரி முனையில் 133 அடிகளில் கற்சிலையை (கிபி 2030 சிலை 17) – (கிபி 2000 சனவரி 1) ஆம் நாள் நிறுவியதன் வழி தமிழ்நாட்டிற்குப் பெருமையைத் தேடித்தந்தார்.. அன்றைய தமிழ்நாட்டு முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்கள்.
அச்சிலையை நிறுவுவதற்கு எண்ணற்ற பாடுகள் பட வேண்டி இருந்தது..
என்பது தனி செய்தி..
ஆனால், நிறுவிய பின்பு சில ஆண்டுகள் கழித்துத் திருவள்ளுவர் சிலை பொருட்படுத்தப்படாத நிலையில் கிடந்ததும்,
அது நிறுவப்பட்டிருக்கும் பாறைக்குச் செல்ல வழி மறுக்கப்பட்ட நிலையில் திருக்குறள் நெறியர்களும், தமிழ் ஆர்வலர்களும் அறிஞர்களும் வெகு மக்களும் பெருமளவில் மன வருத்தம் கொள்ளவுமே நேர்ந்தது.. நேர்ந்து வருகிறது..! திருவள்ளுவர் சிலையின் முதன்மையைக் குறைப்பதற்காக எண்ணற்ற சூழ்ச்சிகள் நடந்து வருகின்றன.
தமிழ்நாட்டின் தேசிய அடையாளமாகக் குமரி முனையில் நிறுவப்பட்டிருக்கும் ஐயன் திருவள்ளுவரின் சிலை தமிழ்நாட்டின் முதன்மை மதிப்புக்குரியதாக அமைக்கப்பட வேண்டும் என ஆர்வலர்கள் அனைவரும் கருதுகிறோம்..
எனவே, பத்தோடு பதினொன்றாக திருவள்ளுவர் சிலையைப் போகிற போக்கில் பார்க்கிறபடியான நிலையை விடுத்துத் தனியே ஐயன் திருவள்ளுவர் சிலைக்கு
மேலும் பெருமை சேர்க்கும் படி குமரிக் கடற்கரைப் பகுதியில் இருந்து திருவள்ளுவர் சிலைக்குப் போவதற்குத் தனியே ஒரு பாலம் அமைத்திட வேண்டுமென்று
அனைவரும் வலியுறுத்துகிறோம்..
அப்பாலத்தில் நடந்து செல்வதே சுற்றுலாத் தன்மைக்கும் சிறப்புத் தரும் வகையில், கட்டணம் கூட தமிழ்நாடு அரசே பெற்றுக் கொள்ளுகிறபடி அமைக்கலாம்..
தமிழ்நாட்டிற்கு வெளியே இருந்து வருகிற அனைவருக்கும் திருக்குறளைப் பற்றியும் திருவள்ளுவரைப் பற்றியும் தமிழ் மொழிச் சிறப்புகள் பற்றியும் எடுத்து இயம்புகிற வகையில் திருவள்ளுவர் சிலைக்கு அடியில் உள்ள மண்டபத்தில் காட்சிப் பொருளாகவும் கையேடுகளாகவும் விற்பனை அடிப்படையில்கூடத் தரும் வகையில் அமைத்தாக வேண்டும்.. தமிழ் மொழி தமிழ் இனத்தின் மீது அக்கறையற்ற பிறர் எவரும் செய்ய முனையாத
மேற்படி செயல்திட்டத்தைத் தமிழ்நாடு அரசு உடனே செய்திட வேண்டும் என்று
திருக்குறள் நெறியர்கள், தமிழ் அறிஞர்கள் தமிழ் ஆர்வலர்கள் அனைவரும் முறையீடு செய்கிறோம்..
பெருந்திரள் முறையீட்டு நிகழ்ச்சி..
திபி 2054 மேழம் 26
(மே 9, 2023)
செவ்வாய்க்கிழமை
மாலை நான்கு மணி முதல் ஏழு மணி வரை..
இடம்: சென்னை- வள்ளுவர் கோட்டம் அருகில்
அனைவரையும் பங்கேற்க அழைக்கிறது…
திருக்குறள் பேரவையம்







