தரமான சாலைகள் மக்களிடம் நிச்சயம் நல்ல பெயரை பெற்றுத் தரும். தோண்டப்படும் சாலைகள் உடனே சரிசெய்யப்பட வேண்டும் என்று அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின் தலைமையில், மாநிலத்தில் நடைபெறும் சாலை மற்றும் பாலப் பணிகள் முன்னேற்றம் குறித்த ஆய்வு கூட்டம் நேற்று தலைமை செயலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: பொருளாதார வளர்ச்சி அடைந்து வரும் காரணத்தால், சாலைகளில் கார்கள் மற்றும் கனரக வாகனங்களின் எண்ணிக்கை மிகவும் உயர்ந்து காணப்படுகிறது. அதேபோல், இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கையும் பன்மடங்கு உயர்ந்து வருகிறது. இன்றைய சூழ்நிலையில், சாலைகளின் தரம் சிறப்பாக இருக்க வேண்டுமென்று மக்களிடம் எதிர்பார்ப்பு இருப்பது நியாயமானதே.
பல்வேறு துறைகள் அரசளவில் இருந்தாலும், இந்த ஒரு பொருளுக்கென்று சாலைகள் மற்றும் பாலங்களின் பணி முன்னேற்றத்தை மட்டும் நான் தனி பொருளாக கொண்டு ஆய்வு மேற்கொண்டதன் மூலம், அதன் முக்கியத்துவத்தை அனைவரும் அறிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். 2021-2022 மற்றும் 2022-2023ம் ஆண்டுகளில், ஊரக வளர்ச்சி துறை, நெடுஞ்சாலைகள் துறை மற்றும் நகராட்சி நிர்வாக துறை ஆகிய துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து புள்ளி விவரங்களோடு நாம் ஆய்வு செய்திருக்கிறோம். மேலும், சுற்றுச்சூழல், நிலஎடுப்பு பிரிவுகளில் போதுமான எண்ணிக்கையில் மாவட்ட வருவாய் அலுவலர்களை நியமித்தல், நிர்வாக ரீதியிலான தாமதங்களை தவிர்த்தல் போன்றவற்றில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






