வேலூர் மாவட்டம், சதுப்பேரி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செந்தமிழ் செல்வன் (வயது 31). இவரது மனைவி ஷீலா, இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். செந்தமிழ்ச்செல்வன் ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட்டில் தனியார் தோல் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். நேற்று இரவு செந்தமிழ் செல்வனுடன் ராணிப்பேட்டை வி.சி. மோட்டூர் பகுதியைச் சேர்ந்த ராஜா (47), வாழைப்பந்தலை சேர்ந்த ராமதாஸ் (26), புளியங்கன்னு பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் (49) ஆகியோர் தோல் தொழிற்சாலையில் உள்ள கழிவுநீர் தொட்டியில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது விஷ வாயு தாக்கி 4 பேரும் மயக்கம் அடைந்தனர். இதில் செந்தமிழ் செல்வனுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
ராஜா, ராமதாஸ், மகேந்திரன் ஆகியோர் மயங்கிய நிலையில் கீழே விழுந்து கிடந்தனர். இதனை கண்ட சக தொழிலாளர்கள் அவர்களை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சிப்காட் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் செந்தமிழ் செல்வன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.







