மும்பையில் உள்ள கிர்காவ் பகுதியில் வசிக்கும் 20 வயது பெண் ஒருவர், நவிமும்பையில் உள்ள பேலாப்பூருக்கு நேற்று தேர்வு எழுத சென்றார். இதற்காக அவர் காலை 7.30 மணி அளவில் சி.எஸ்.எம்.டி. பகுதியில் ஹார்பர் லைனில் இருந்து செல்லும் மின்சார ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறினார். அந்த பெட்டியில் அவரை தவிர வேறு யாரும் இல்லை என தெரிகிறது. அந்த ரெயில் மெதுவாக நகர தொடங்கியபோது, திடீரென 40 வயது மதிக்கத்தக்க மர்மநபர் ஒருவர் அந்த பெட்டிக்குள் ஏறினார். அவர் பெண்கள் பெட்டியில் யாரும் இல்லாத சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் மஸ்ஜித் பந்தர் ரெயில் நிலையம் வந்தபோது உதவிக்கேட்டு சத்தம்போட்டார். இதனால் பயந்தபோன ஆசாமி பெட்டியில் இருந்து இறங்கி ஓடிவிட்டார்.
இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் உடனடியாக ரெயில்வே போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த ரெயில்வே போலீசார் குற்றவாளியை கண்டறியும் பணியை தொடங்கினர். ரெயில் நிலையத்தில் உள்ளேயும், வெளியேயும் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் ஓடும் ரெயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரின் அடையாளம் காணப்பட்டு மாலை 4 மணி அளவில் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட ஆசாமி கூலித்தொழிலாளி என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இது சம்மந்தமாக விசாரணை நடைபெற்று வருகிறது.







