விருதுநகர் மாவட்டம் பாண்டியன் நகரில் உள்ள அண்ணா நகரை சேர்ந்தவர் ராம லட்சுமி. இவரது முதல் கணவர் முத்துராஜ். இவர்களது மகன் முத்துப் பாண்டி 17. முத்துராஜ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அதன் பிறகு தனது மகனுடன் வசித்து வந்த ராமலட்சுமி, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பாலமுருகன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அவரது வீட்டில் தனது மகனுடன் வாழ்ந்து வந்தார். ராமலட்சுமியின் மகன் முத்துப்பாண்டி நேற்று இரவு வீட்டில் இருந்தார். அப்போது அவரை சிலர் வீட்டில் இருந்து வெளியே அழைத்துச் சென்றுள்ளனர். அவர்களுடன் சென்ற முத்துப்பாண்டி, இரவில் வெகு நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வர வில்லை.
இந்தநிலையில் பாண்டியன் நகரில் உள்ள ஜக்கம்மாள் கோவிலுக்கு பின்புறம் வாலிபர் ஒருவர் உடலில் ரத்த காயங்களுடன் சடலமாக கிடப்பதாக விருதுநகர் பாண்டியன் நகர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு சடலமாக கிடந்த வாலிபரின் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அப்போது அவரை யாரோ மர்ம நபர்கள் பீர் பாட்டிலால் அடித்தும், கத்தியால் கழுத்தை அறுத்தும் படுகொலை செய்தது தெரிய வந்தது. கொலை செய்யப்பட்டு கிடந்த அந்த வாலிபர் யார்? என்று விசாரணை நடத்தியதில், முத்துப்பாண்டி என்று அந்தப்பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து முத்துப்பாண்டியின் தாய் ராமலட்சுமியை போலீசார் சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அப்போது கொலை செய்து சடலமாக கிடப்பது தனது மகன் தான் என்று அவர் அடையாளம் காட்டினார். மேலும் சற்று நேரத்திற்கு முன் வீட்டில் இருந்த தனது மகன் படுகொலை செய்யப்பட்டு சடலமாக கிடப்பதை பார்த்து கதறி அழுதார். இதைத்தொடர்ந்து முத்துப்பாண்டியின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரை கொன்ற கொலையாளிகள் யார்? என்று விசாரணை நடத்தினர். முத்துப்பாண்டியை இரவு நேரத்தில் அழைத்து சென்றது யார்? என்று அவரது தாயிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது தங்களது பகுதியை சேர்ந்த அஜித் என்ற அஜித்குமார், செல்லம் என்ற விஜய், தனுஷ் உள்ளிட்டோர் தனது மகனை அழைத்துச் சென்றதாக அவர் தெரிவித்தார்.
இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் தேடியபோது தலைமறைவாகி விட்டதும், அவர்கள் தான் முத்துப்பாண்டியை கொன்றதும் தெரியவந்தது. அஜித் உள்ளிட்ட 4 பேரும் கலைக்குழுவை சேர்ந்த வாலிபர்கள் ஆவர். அவர்களுடன் முத்துப்பாண்டிக்கு பழக்கமும் இருந்துள்ளது. கலைக்குழு வாலிபர்கள் 4 பேருக்கும் இடையே பிரச்சினை ஏற்படும் வரையில் முத்துப்பாண்டி செயல்பட்டதாக கூறப்படுகிறது. இதனையறிந்த அவர்கள், நேற்று இரவு முத்துப்பாண்டியை அழைத்துச்சென்று பேசியுள்ளனர். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. அதில் ஆத்திரமடைந்த 4 பேரும் முத்துப்பாண்டியை பீர் பாட்டிலால் தலையில் அடித்தும், கத்தியால் முகம், கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் வெட்டியும் கொலை செய்திருப்பது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து அஜித் உள்ளிட்ட 4 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிந்தனர். தலைமறைவாக உள்ள அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.







